Sunday, March 31, 2019

சிறந்த மாணவர்களாக வளர்வது எப்படி ? - 19

சிறந்த மாணவர்களாக வளர்வது எப்படி ? 
கற்பது எளிதில்லாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை விட எதைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதைப் பற்றி அதிகம் சிந்திப்பதும், எதையும் விரைந்து கற்றுக்கொண்டு விடவேண்டும் என்று கற்பதில் அவசரம் காட்டுவதும் , கற்பதின் முக்கியத்துவத்தை உணராமல், இயந்திர கதியில் பிறருக்காகப்  படிப்பதும் ஒரு சில முக்கியக் காரணங்களாகும் . இதனால் கற்றுக்கொள்ள வேண்டியதைத் தவறவிட்டுவிட்டு , கற்றுக் கொள்ளக்கூடாதனவற்றைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களே அதிகரிக்கின்றன.  நேர்மறையான எண்ணங்களை விட்டுவிட்டு எதிர்மறையான எண்ணங்களை வலிந்து விடாப்பிடியாக வைத்திருப்பதால் நேர்மையான கல்வியைப் பெறுவதில் அகத் தடைகள் ஏற்படுவதைத் தடுத்துக் கொள்ள முடிவதில்லை .இதை ஒரு வேத காலக் கதையொன்றால்  புரிந்து கொள்ளலாம் . 
ஒரு இளைஞன் அந்தரத்தில் மிதத்தல், நீரின் மேல் நடத்தல்,  தீயை விழுங்குதல் , முன் ஜென்ம நிகழ்வுகளைக் கூறுதல்,எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தல்  போன்ற  தெய்வீக சக்திகளைப் பெறவேண்டும் என்றும் அதைக்கொண்டு சமுதாயத்தில் பேறும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்றும்  விரும்பினான். அவற்றைக் கற்றுத்தரக்கூடிய குருவை த் தேடித்தேடி அலைந்தான்.நீண்டகாலமாக  அவன் எதிர்பார்த்த மாதிரி அவனுக்கு ஒரு குரு கிடைக்கவில்லை .கடைசியில் ஒரு துறவி அவனுக்கு  " இது போன்ற தெய்வீக சக்திகளைக் கற்றுத்தரக்கூடிய ஒரு குரு திபெத்தின் இமயமலை அடிவாரத்தில் உள்ள புத்த மடாலயத்தில் இருக்கின்றார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப் போய் பார்த்தல் ஒருவேளை உன் விருப்பம் நிறைவேறலாம் "  என்று ஒரு யோசனை கூறினார் .   கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் நடைப்பயணமாகவே பல மாதங்கள் சென்று இறுதியில் அந்த புத்த மடாலயத்தைச் சென்றடைந்தான் . தலைமைக் குறுவைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறினான் . அவரும் அதைக் கேட்டுவிட்டு " தெய்வீக சக்திகள் தெய்வங்களுக்கு மட்டுமே உரியவை . தெய்வீகப் பண்புகளைப் வளர்த்துக் கொண்ட  மனிதர்களால் மட்டுமே அப்படிப்பட்ட சக்திகளைப் பெறமுடியும் , மற்றவர்கள் அதைக் கற்றுக் கொண்டாலும் விரைவில் இழந்துவிடுவார்கள் " என்றார் . அந்த இளைஞன் கீழே விழுந்து குருவை வணங்கி " நான் இதைக் கற்றுக்கொள்ள  நெடுந்தொலைவு கடந்து வந்திருக்கின்றேன் , தாங்கள் மறுக்காது கற்றுத்தர வேண்டுகின்றேன் " என மன்றாடினான். குருவும் அவனுக்குக் கற்றுத்தர சம்மதித்து  மறுநாள் விடியற்காலையில் 4 மணிக்கு ஆற்றில் நீராடி, புத்தரை வணங்கிவிட்டு வரச் சொன்னார் . அவனும் அப்படியே வர, குருவும் தெய்வீக சக்திகளைப் பெறுவதற்கான மந்திரங்களை அவன் காதில் மெல்லக் கூறினார்.  கொஞ்ச நேரம் தியானித்து விட்டு , " இந்த மந்திரத்தை எப்பொழுது உச்சரித்தாலும் பிழையில்லாமல் உச்சரிக்க வேண்டும். தவறினால் அந்த மந்திரத்தை மறந்து போவாய் என்றும் மந்திரத்தை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் பாம்பை மட்டும் நினைக்கக் கூடாது ஏனெனில் அது தேவர்களிடமிருந்து தெய்வீக சக்திகளை விழுங்கிவிடக் காத்துக் கொண்டிருக்கின்றது ."  என்றார் . சில நாட்களுக்குப் பிறகு  குருவிடம் விடை பெற்றுக்கொண்டு  ஊருக்குத் திரும்பினான். வரும் வழியிலேயே அந்த மந்திரங்களை சோதித்துப் பார்க்க விரும்பி , பிழையில்லாமல் உச்சரிக்க வேண்டுமே என்ற மன அழுத்தத்தில் , பாம்பைப்பற்றி நினைக்கூடாது என்று சொன்னாரே என்று பாம்பை  நினைத்துக் கொண்டே மந்திரங்களைப் பிழையோடு உச்சரிக்க , அவன் ஊர் போய்ச் சேர்வதற்கு முன்னரே கற்றுக்கொண்ட தெய்வீக சக்திகளை இழந்துவிட்டான்.கற்றுக் கொள்ளும் போது , கற்றுக் கொள்ள வேண்டியவற்றோடு ,கற்றுக்கொள்ளக் கூடாதன வற்றையும் கற்றுக் கொள்வதால் , அவைகளின் குறுக்கீட்டால்  கற்றதைப் பயன்படுத்த முடியாத நிலையே ஏற்படுகின்றது. 

No comments:

Post a Comment