Monday, March 25, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 11

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? -
கல்வி தேடுதல் என்பது புரிதல் மூலம் ஒருவர் தன் திறமையை வளர்த்துக்கொள்ள மேற்கொள்ளப்படும்  சுய முயற்சி . தன்னார்வமின்றி சுயமுயற்சி வெளிப்படுவதில்லை. சுயமுயற்சிகளின் தொடக்கம் என்பது ஒருவர் ஆக்கப்பாடான பணிகளில் ஈடுபடுவதை தெரிவிக்கும் முன்னறிவிப்பு  . 
கல்வி தேடுதல் கற்கும் கல்வியை முழுமையூட்டுகின்றது . ஒரு சரியான இலக்கைத் தேர்வு செய்ய இது வழி காட்டுகின்றது . அதனால் சுயமாக ஒரு இலக்கை நோக்கங்கொள்ள மாணவப் பருவத்திலேயே  வாய்ப்பு ஏற்படுகின்றது. இலக்கை நோக்கிய பயணத்தை விடாது தொடர இயற்கையாகவே ஒரு உந்துதல் உள்ளுக்குள் ஊற்றெடுக்கக் காரணமாயிருக்கின்றது. 
 சுய முயற்சியுடன் செய்யப்படும் எந்த வேலையும்  நிறைவாக முடியும் வாய்ப்பைக் கொண்டுள்ளது என்பதால் அதற்கு அடிப்படையான   கல்வி தேடுதலைத்  தன்னார்வத்துடன் மேற்கொள்ள வேண்டும்.  ஏனெனில் இந்த தன்னார்வம் கல்வி தேடுதலால் ஒவ்வொருமுறையும் புதுப்பிக்கப்பட்டு எண்ணத்தில் நிலைநிறுத்தப்படுகின்றது
ஒரு துறையில் ஈடுபட்டு அதில் சாதிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு அத்துறையில் மென்மேலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க ஆர்வப்படுவதைத் தவிர வேறு சிறந்த வழியில்லை.தொடக்கத்தில் இருக்கும் ஆர்வம் இறுதி வரை தொடர்வதில்லை.அதனால் சாதிப்போர் வெகு சிலராகி வருகின்றார்கள்.ஒரு குறிப்பிட்ட துறையில் இருக்கும் ஆர்வம் பிற துறை ஆர்வங்களினால் நிறம் மாறிப்போவதே இதற்குக் காரணமாகின்றது .பெரும்பாலானோரிடம் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளில் கொள்ளும் ஆர்வம் தன் விருப்பத் துறையில் இருக்கும் ஆர்வத்தை மட்டுப்படுத்திவிடுவதற்கு ஒரு வலிமையான காரணமாக இருக்கிறது .
இன்றைக்கு பொழுதுபோக்கினால் கிடைக்கும் சுகத்தை அனுபவிப்பேன்.இன்னும் காலம் இருக்கிறது, அப்போது தன்விருப்பத் துறையில் ஈடுபட்டு எல்லாவற்றையும் செய்து முடிப்பேன் என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்ளலாம். தள்ளிப்போடும் எந்த வேலையும் சிறப்பாகச் செய்து முடிக்கப்படுவதில்லை.பலர் இந்த எண்ணத்தினால் ,சராசரி வாழ்க்கையே தனக்கு அளிக்கப்பட்டது என்று முடிவு செய்து விட்டு பிற்காலத்தில் எதையும் சாதிக்கத் தவறிவிடுகின்றார்கள்.
காட்டு விலங்குகள் ஒவ்வொன்றும் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை நிர்ணயித்துக் கொண்டிருக்கும்.இந்த எல்லையைத் தாண்டி யார் புகுந்தாலும் அவர் அந்த விலங்கால் தாக்குதலுக்கு ஆளாவார் .இந்த உண்மையை வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் .அது போல நம்முடைய எண்ணங்களுக்கும் ஒரு பாதுகாப்பு வளையமுண்டு .இந்த வளையத்தைத் தாண்டி மற்றொரு எண்ணம் ஊடுருவிச் செல்ல அனுமதிக்காத வரை கொண்டுள்ள ஒவ்வொரு எண்ணமும் தனித்து வலுப்பெற்று வளம்பெறும் .
தன் விருப்பத் துறையில் ஒருவர் தொடர்ந்து ஈடுபட்டாலும் எளிதில் சோர்வடைவதில்லை.விருப்பத் துறையில் ஆர்வம் அதிகரிக்க பிற துறைகளில் நாட்டம் ஏற்படுவதில்லை.
ஆர்வப்படாமல் பெரிய ,அரிய காரியங்களை யாராலும் செய்து முடிக்க முடியாது .திறமையை வளர்த்துக் கொள்ளவும் ,ஒரு குறிப்பிட்ட துறையில் முன்னிலை அடையவும் பயனுள்ள எதையாவது செய்யக் கூடிய ஆற்றல் பெறவும் வற்றாத  ஆர்வம் இருக்க வேண்டியது அவசியம் 
ஆர்வமின்றி எதைச் செய்தாலும் அது கடினமான செயலாகத்தான் தோன்றும்.எளிமையும்,கடுமையும் செய்யப்படும் செயலில் இல்லை. அது மனதில் தங்கியிருக்கும் ஆர்வத்தைப் பொறுத்தது . 
ஆர்வம் கொள்வதற்கு சில அடிப்படைகளை நாம் விடாது மேற்கொள்ளவேண்டும் .அவை ஆர்வப்படுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கின்றன.உணர்வுருப்புக்களைக் கொண்டு அதிகமாகத் தெரிந்து கொள்ளவும் ,புரிந்து கொள்ளவும் வேண்டும் .தெரிந்து கொள்வதை விட,அறிந்து கொள்வதை விடப் புரிந்து கொள்வது ஆர்வப்படுவதற்கு அவசியமானது .தூண்டப்படும் ஆர்வத்தை  விட தன் ஆர்வம் மிகவும் வலிமையானது, செயல் திறன் மிக்கது .தூண்டப்படும் ஆர்வம் என்பது அயல் மொழிக் கல்வி என்றால் தன்னார்வம் தாய் மொழிக் கல்வி போன்றது. தூண்டப்படும் ஆர்வம் தன்னார்வமாக நிலை மாற்றம் அடையாத வரை  முன்னேற்ற வீதத்தில் அதிக மாற்றம் விளைவதில்லை 

No comments:

Post a Comment