Saturday, March 23, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 8

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
வாழ்க்கை முழுதும் நிறைவான மகிழ்ச்சியோடு கூடிய மேலான வாழ்க்கையைப் பெற  உடலும் உள்ளமும் நலமாக இருக்க வேண்டும் . இதில் ஒன்றின் நலம் குறைவாக இருந்தாலும்  வாழ்க்கையின் இனிமை  குன்றிவிடும் . மனதை மட்டும் கவனித்தால் போதாது ,மனம் குடியிருக்கும் உடலையும் கவனிக்க வேண்டும் என்பதை  " காலை எழுந்தவுடன் படிப்பு , பின்பு மாலை முழுதும் விளையாட்டு "  என்று  மகாகவி பாரதி சொல்லுவான் .
நல்லொழுக்கத்திற்காகக் கல்வி கற்றுக்கொள்ள மேற்கொண்ட  முயற்சிக்குப் பின்  காலைக் கடன்களைச் செய்து முடிக்க வேண்டும். தன் வேலைகளைத் தானே செய்யும் பழக்கத்தை  விரும்பிச் செய்யவேண்டும் .தன்னால் செய்ய முடியாத  வேலைகளைச் செய்ய மட்டுமே பிறர் உதவியைத் தேடிப் பெறலாம்.
பல் துலக்குவது, குளிப்பது , அலங்காரம் செய்து கொள்வது ,  ஆடை அணிவது , உணவு உட்கொள்வது , பள்ளிக்குப் புறப்படுவது ,  வீடு திரும்புவது , என எல்லா  வேலைகளும் தாமதமின்றி நேரப்படி நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும் . கிடைக்கும் நேரத்தை வீணாக்கிவிடாமல் இருக்க ஒவ்வொரு வேலைக்கும்   இவ்வளவு       நேரம் என்று முன் தீர்மானம் செய்து கொள்வது நல்லது . பல திறமைகள் உள்ளவர்களும் வாழ்க்கையில் தோற்றுப் போகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்கள் நேரத்தை சரியாக மேலாண்மை செய்யாததேயாகும்  . 
நேரத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை இளம்வயதிலேயே அறிந்து கொண்டால் பிற்காலத்தில் பணி மற்றும் குடும்பச் சுமை காரணமாக கூடுதல் நேரம் தேவைப்படும் போது வெற்றிகரமாகச்  சமாளிக்க முடியும்.இதைக் கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்குத்தான் இருக்கின்றது .
நேரத்தைத் தேவையின்றிச்  செலவழிக்காதே , முதலீடு செய்  என்று அறிஞர்கள் சொல்லுவார்கள் . இதன் உட்பொருள் என்னவென்றால் நேரத்தை வீணாக்கச்  செலவு செய்தால் தற்காலிய சுகம் மட்டுமே கிடைக்கும், முதலீடு செய்தால் பிற்காலத்தில் அதை விரும்பியவாறு  வேறு வடிவில் பெற்று மகிழலாம் .   சம்பாதித்த பணத்தை மட்டும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் மட்டும் போதாது , நேரத்தையும் அதி புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். பொருள் செலவின்றி நேரம்  தானாகவே கிடைக்கின்றது என்பதாலும் , வீணாக்கி விட்டாலும் தொடர்ந்து கிடைக்கின்றது என்பதாலும் பெரும்பாலான மாணவர்கள் நேரத்தை  முதலில் வீணாக்கிவிட்டு பின்னர் வருத்தப்படுபவர்களாகவே இருக்கின்றார்கள் . குழாயில் வடிந்து  வீணாகும் குடிநீரைப் பற்றி கவலைப்படாவிட்டால்  குடிக்க ஒரு சொட்டு நீர் கிடைக்காத போது அதிகம்  துன்பப்பட நேரிடும்.
உழைப்பின்றி எடுத்துக் கொள்ளும் பொழுதுபோக்கு நேராத்தைச் செலவழி ப்பதாகும் .பொழுதுபோக்கின்றி உழைப்பது என்பது உடல் நலத்தைக் கெடுப்பதாகும் . உழைப்பதற்கான நேரத்தில் உழைப்பது என்பது நேரத்தை முதலீடு செய்வதாகும் .இதை ஒரு சிறு கதை மூலம் புரிந்து கொள்ளலாம் .
ஒரு குடியானவனுக்கு இரண்டு பிள்ளைகள். இறக்கும் தருவாயில் அவர்களின் விருப்பப்படி  தன் சொத்தைப் பிரித்துக் கொடுத்தான். மூத்தவன் தங்கக் கட்டிகளையும் , இளையவன் கரடு முரடான மேட்டு நிலத்தையும் பெற்றுக் கொண்டனர். .மூத்தவன் தங்கத்தை விற்று விற்று உயிர் வாழ , ஒரு கால கட்டத்தில் பொருளின்றித் தவித்தான். இளையவன் கரடு முரடான நிலத்தைப் பக்குவப் படுத்தி , அதை பொன் விளையும் பூமியாக்கி , காலம் முழுதும் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தான் .
ஒருவருடைய வாழ்க்கையின் இனிமை  அவரவர் எண்ணத்திலும் ,செயலிலும் தான் இருக்கின்றது. எண்ணத்தை மனதாலும் , செயலை உடலாலும்  செய்ய வேண்டியிருப்பதால் அவற்றின் நலத்தை ஒவ்வொரு நாளும் கவனிக்க வேண்டியது அவசியமாகும் .

No comments:

Post a Comment