Saturday, March 9, 2019

சிறந்த மாணவனாய் வளர்வது எப்படி ? - 2

சிறந்த மாணவனாய் வளர்வது எப்படி ? - 2


எண்ணங்களைத் தேர்வு செய்து ஏற்றுக்கொள்ளும் சுய முயற்சி எல்லோருக்கும் , எப்போதும் நேர்மையாகவும் உறுதியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது . அப்போது வளர்ச்சிப் பாதையிலிருந்து சறுக்கி விழுந்து விடும் அல்லது திசை மாறிப் போகும் நிலை ஏற்படலாம் . இதற்குப் பல அக மற்றும் புறக்  காரணங்களைக் குறிப்பிடலாம். அவற்றை ஒருசேரப் புரிந்து கொண்டால்  அதனால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுத்துக் கொண்டு சிக்கலிலிருந்து முழுமையாக விடுபடக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக்  கொள்ள முடியும் .
நூல்கள் பலவற்றைக் கற்றாலும் அக் கல்வி ஒருவர்க்கு உரிமையுடைய அறிவாகிவிடாது , கற்றதை உள்வாங்கி கொண்டு வாழ்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் அனுபவத்தைப்  பெறும்போது உடன்வரும் அறிவே ஒருவருடைய உண்மையான அறிவாகின்றது .
" நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றுந்தன்                                                    உண்மை அறிவே மிகும் "
என்ற குறள் மூலம் வள்ளுவர் இக் கருத்தினை மிக அழகாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார். கற்றவர்கள் கூட தவறான பாதையில் நடக்கும் நிலைக்கு இதுவே அடைப்படையாகின்றது. "பல கற்றும் கல்லார் அறிவில்லாதார்"   என்று இவர்களை அன்றைக்கே வள்ளுவர் இனங்காட்டியுள்ளார்.    தவறான இலக்குகளை நோக்கிப் பயணிக்கத் தூண்டும் எண்ணங்களின் ஆக்கிரமிப்பை அனுமதிக்கும் மனம் , சரியான இலக்குகளைத் தேர்வு செய்து அதை எட்டுவதற்கான முயற்சிகளைத் தடுத்து விடுகின்றது. சுய நலமிக்க எண்ணங்கள் சமுதாய நலத்தைப் பாதுகாப்பதில்லை .இந்த சுயநலமிக்க எண்ணங்களை பெரும்பாலும் சமுத்தியதிலிருந்தே ஒவ்வொருவரும் கற்றுக்  கொள்கின்றார்கள்.  தனி மனித ஒழுக்கமும், சமுதாயத்தின் ஒழுக்கமும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையது . ஒரு சராசரி மனிதனை அடையாளம் காட்டுவது அவன் வாழும் சமுதாயமே . ஒரு நல்ல சமுதாயத்தில் வாழும் மக்கள் என்றைக்கும் நல்லோர்களாகவே இருப்பார்கள் .அது  வளரும் தீய எண்ணங்களை யாரும் அறிவதற்கு முன்பாகவே  களை எடுத்து அழித்து விடுகின்றது.அப்படிப்பட்ட சமுதாயம் தனி மனிதர்களின் வாழ்க்கைக்கு வலிமையான பாதுகாப்பாய் இருக்கும்.  ஒரு தீய சமுதாயத்தில் வாழும் மக்கள் நல்ல புறத்தோற்றத்துடன் தீய அகத்தோற்றம் கொண்டிருப்பார்கள்.அங்கு தீய எண்ணங்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து வருவதால் தனிமனிதர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகின்றது. எனவே சாகாத சமுதாயத்தில் நாமும் நமக்குப்  பிறகு நம் சந்ததியினரும் பாதுகாப்பாய் வாழவேண்டுமானால் சமுதாய நலங்காகும் எண்ணங்களை வளப்படுத்திக் கொள்ளவேண்டும்.  இதில் நாம்  செய்யும் பிழைகள் மீட்டுருவாக்கம் செய்ய முடியாத இழப்புக்களை ஏற்படுத்தும்   

No comments:

Post a Comment