Friday, March 1, 2019

creative thoughts

பூட்டும் சாவியும்




 கடல் இருந்தால் அலையிருக்கும்
கற்பனை இருந்தால் கலை பிறக்கும்
மலர் இருந்தால் மணமிருக்கும்
மனமிருந்தால் வழி கிடைக்கும்
கனி இருந்தால் சுவையிருக்கும்
கேள்வி  என்றால் பதிலிருக்கும்
இருள் இருந்தால் ஒளி இருக்கும் 
இசைக் கருவி இருந்தால் நாதம் பிறக்கும்
குழந்தையாயிருந்தால்  மழலை இருக்கும்
இளைஞனாயிருந்தால் ஆக்கம்  இருக்கும்
பெண்ணாயிருந்தால் சமுதாயம் பிழைக்கும்
முதியவராய் இருந்தால் அனுபவம்  இருக்கும்
நாம் காணும் உலகில் எதுவுமே தனிமையில் இல்லை 
தனிமை என்று நினைத்தால் அது ஒரு தோற்றப் பிழையே
பூட்டு இருந்தால் சாவி இருக்கும்
ஒவ்வொரு பூட்டும் அதற்குரிய சாவியோடுதான் உருவாகின்றன. அந்தச் சாவியைக் கொண்டு பூட்டை ஒவ்வொருமுறையும் எளிதாகத் திறந்து விடுகின்றோம் . பூட்டு இல்லாமல் சாவி மட்டும்  உருவாக்கப் படுவது இன்றைக்கு ஏற்பட்டாலும் சாவியில்லாமல் பூட்டு ஒருநாளும் உற்பத்தி செய்யப்படுவதில்லை . இறைவன் ஓவ்வொருவருக்கும் பல  பிரச்சனைகளை  தந்துள்ளான்  என்றாலும் அதைத் தீர்வு செய்வதற்குரிய சாவிகளைத் தராமல் இல்லை.     நம் பிரச்சனைகளைத் தீர்வு செய்யக்கூடிய திறமை  நம் உடல் உறுப்புக்களுக்கு உண்டு . எந்தப் பிரச்சனையையும் சரியான சிந்தனையாலும் செயலாலும் தீர்வு செய்ய ஒவ்வொருவருக்கும் எல்லையற்றுச் சிந்திக்க மனமும் , அதைச் செயல் படுத்த உடல் உறுப்புக்களையும் பிறக்கும் போதே தந்துள்ளான். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவர்களே பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறாரார்கள்.
 பல சாவிகள் திறக்கும் ஒரு பூட்டை  விட பல பூட்டுக்களைத் திறக்கும் ஒரு சாவி மேலானது. அது போல ஒரு பிரச்சனைக்குப் பல  தீர்வுகள் என்பதை விட பல  பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்பது பயனுள்ளது . பல தீர்வுகள் இருப்பதாகச் சொன்னால் அது ஒரு சிலருக்கு அனுகூலமாகவும் வேறு சிலருக்கு பயனற்றதாகவும் இருப்பதால் ஏற்றுக்கொள்ளுவதில் சிக்கல் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகின்றது,
பூட்டு எங்கிருந்தாலும் சாவி எப்போதும் பையில் அல்லது கையில்  இருக்க வேண்டும் என்பதற்காக பூட்டு சிறியதாக, பெரியதாக  எப்படி இருந்தாலும் சாவி எப்போதும் பூட்டை விட சிறியதாகவே இருக்கும், ஒருவருடைய வீட்டிலுள்ள பூட்டுக்கள் அனைத்திற்குமுரிய சாவிகள் அவருடைய கையில் இருப்பதைப் போல அவருடைய பிரச்சனைகள் அனைத்திற்கும் உரிய தீர்வுகள் அவருடைய சிந்தனையில் இருக்கின்றன. சாவியைத்  தொலைத்தவர்கள் மாற்றுச் சாவி தேடுவதைப் போல  சுய சிந்தனையற்றவர்களே தீர்வை வெளியில் தேடுவார்கள்.
சாவி தங்கமாக இருந்தாலும், இரும்பாக இருந்தாலும் பூட்டை திறக்கக் கூடியதாக இருக்க வேண்டும்  .




No comments:

Post a Comment