Sunday, August 29, 2010

vanna vanna ennangal-12


                                           உனக்கு மட்டும் ஓர் இரகசியம்




உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ஓர் இரகசியம் சொல்வேன்

காது கொடுத்து அதைக் கேட்டு

காலத்தை நீ வெல்வாயா ?


ஒழுக்கம் உன்னிடம் குடியிருந்தால் போதும்

உயர்விற்கு வழிகள் கூடிவரும்

வெத்துப் பேச்சைக் குறைத்தால் போதும்

வேலைகள் தானாய் நிறைவேறும்

சொற்கள் சுத்தமாய் இருந்தால் போதும்

உலகம் உன்னை நம்பும்

சோம்பல் தினமும் வந்தால் போதும்

சுகமெல்லாம் பறந்து போகும்


உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ஓர் இரகசியம் சொல்வேன்

காது கொடுத்து அதைக் கேட்டு

காலத்தை நீ வெல்வாயா ?


நல்லோர் அறிவுரை கேட்டால் போதும்

நல்லதே வாழ்க்கையில் நடக்கும்

தீயோரைத் தாண்டிப் போனால் போதும்

தீமைகள் விலகிப் போகும்

போராடத் துணிவு இருந்தால் போதும்

புகழோடு வாழ முடியும்

பொறுமையைக் கடைப் பிடித்தால் போதும்

உன்பங்கு உன்னைச் சேரும்


உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ஓர் இரகசியம் சொல்வேன்

காது கொடுத்து அதைக் கேட்டு

காலத்தை நீ வெல்வாயா ?


தொலை நோக்கு தொடர்ந்தால் போதும்

தொல்லைகளைத் தவிர்க்க முடியும்

சிந்தனை வளம் வளர்ந்தால் போதும்

சிறப்பால் சிறக்க முடியும்

களைப்பின்றி உழைக்கத் தெரிந்தால் போதும்

களிப்பில் திளைக்க முடியும்

நம்பிக்கை நெஞ்சில் துளிர்த்தால் போதும்

எதையும் சாதித்து விடமுடியும்


உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ஓர் இரகசியம் சொல்வேன்

காது கொடுத்து அதைக் கேட்டு

காலத்தை நீ வெல்வாயா ?


உற்சாகம் உறங்காமல் விழித்திருந்தால் போதும்

உலகமே உன்கையில் உறங்கும்

இறைவனை இதயத்தில் தீண்டினால் போதும்

தீயஎண்ணங்கள் தேய்ந்து போகும்

பொறாமையைப் புதைத்து விட்டால் போதும்

புகழ் உன்னைத்தேடி வரும்

தவறுகளைத் தவறாது தவிர்த்தால் போதும்

உறவுகள் உன்னோடு ஒட்டும்


உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ஓர் இரகசியம் சொல்வேன்

காது கொடுத்து அதைக் கேட்டு

காலத்தை நீ வெல்வாயா ?

No comments:

Post a Comment