Monday, April 1, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 20

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?  
கற்றுக் கொள்ள வேண்டியதை கஷ்டப்பட்டுக் கற்றுக் கொள்ளும் போது , இஷ்டப்பட்டுக் கற்றுக் கொள்ளக் கூடாதனவற்றையும் கற்றுக்  கொண்டுவிடுகின்றோம். இது கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டதை மறக்கச் செய்து விடுகின்றது.கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டவை தனக்கும் சாகாத சமுதாயத்திற்கும் நற்பயன் வழங்கி குறைவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும்  ஆனால் இஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்ட தேவையற்றவை கணப்பொழுது மகிழ்ச்சியைக் கொடுத்து மனதை மயக்கி , மீளாத் துயரத்தை  வாழ்க்கை முழுதும் தந்துவிடும். 
  மனத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களால் மட்டுமே இப்பிரச்சனையை எளிதில் சமாளிக்க முடியும் . ஒரு நச்சுச் செடியின் விதை முளைத்துச் செடியாக வளரும் போதே அதன் பயனை முன்னுணர்ந்து பிடுங்கி எறிவது எளிது . மரமாக வளர்ந்த பின்பு அதை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல, வெட்ட வெட்ட அது மீண்டும் தழைத்து வளரும் . மனம் என்ற நிலத்தில் வளரும் தேவையில்லாத எண்ணங்களின் நிலைப்பாடும் இதுதான் .மனதில் தோன்றும் விகாரங்களை இளைமைக்காலத்திலேயே அழித்துவிடவேண்டும், இல்லையென்றால் தன்னுடைய வாழ்க்கையையும் கெடுத்து சமுதாய வாழ்க்கையையும் கெடுக்கும் நிலையே உருவாகும் . 
அதைப்போல கற்பதை விரைந்து கற்றுக் கொள்ள முடியாது..விரைந்து கற்றுக்கொள்ள முடியும் என்று நாம் நம்புவதற்குக் காரணம் புரிதல் இல்லாமல் தெரிந்து கொள்வதுதான் கற்பது என்று தவறாக நாம் முடிவு செய்வதுதான் 
ஒரு இளைஞன் தற்காப்புக்  கலையைக் கற்றுக்கொள்ள விரும்பி ஒரு குருவை  நாடினான்." ஐயா , இந்தக் கலையை முழுமையாகக் கற்றுக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும் ? "  என்று கேட்டான் .அதற்கு " இரண்டு வருடங்கள் ஆகும் " என்று குரு கூற, இளைஞனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. " ஐயா, அடுத்த ஆண்டு நான் வெளிநாடு செல்ல வேண்டும் , அதற்குள் கற்றுகொள்ள ஆசைப்படுகின்றேன் . முக்கியமான வற்றை மட்டும்  கற்றுக் கொடுங்கள்" 
" அப்படிக் கற்றுக் கொண்டால் அதனால் பயனில்லை . அதற்குக் கற்றுக் கொள்ளாமலேயே  இருக்கலாம் " 
" அப்படியானால் நான் தினமும் கூடுதல் நேரம் கற்றுக் கொள்கின்றேன். வேகமாகக் கற்றுக்கொண்டால் விரைந்து முடிக்கலாமே " 
குரு மெல்லச் சிரித்துவிட்டு  " அப்படிக் கற்றுக் கொண்டால் , முடிப்பதற்கு நான்கு வருடங்கள் அல்லது அதற்கும் கூடுதல் காலம் ஆகலாம் " என்றார் 
கற்று பயன்படுத்த வேண்டியதை அவசரப்பட்டு கற்றுக் கொள்ள  முடியாது.அவசரம் புரிதலின்மைக்கு  அடிப்படை.  செய்முறையில் பிழைகள் ஏற்படுவதற்கும்  , சூழ்நிலைக்கு ஏற்ப செய்முறையில் தகுந்த மாற்றத்தை உடனடியாகச் செய்யமுடியாமல் போவதற்கும் இது காரணமாக அமைகின்றது.

No comments:

Post a Comment