Monday, April 29, 2013

Creative thoughts


Creative Thoughts

நீங்கள் இல்லாமல் எப்படி உங்களுக்குத் திருமணம் நடைபெறமுடியாதோ ,அதுபோல உங்கள் ஈடுபாடு இல்லாமல் உங்கள் வாழ்கையில் எந்த மாற்றமும் நிகழமுடியாது .

ஒருவர் வாழ்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு அவரே காரணமாக இருப்பதோடு மிக மிக்கியப் பங்கும் ஏற்கின்றார் .மாற்றங்கள் தரும் வெகுமதிகளை அள்ளிக் காட்டிக்கொள்ளப் போகின்றவர் அவர் மட்டும் தான் என்பதால் மற்றவர்கள் ஒருபோதும் அதிகப்படியான அக்கறை காட்டுவதில்லை .

ஒவ்வொரு மாற்றமும் நிச்சயம் வெகுமதி தரும் .அந்த வெகுமதியைப் பெறுவதற்கு நாம்தான் தகுதியுடையவராக இருக்கவேண்டும் .வேலை செய்வதற்கு மட்டுமன்று அதன் பலனைப் பெறுவதற்கும் தகுதி யுடையவராக இருக்கவேண்டும் .

தகுதியுடையவனாக இருப்பது முக்கியம் .காலத்தோடு தகுதியுடையவனாக இருப்பது அதைவிட முக்கியம் .காலந்தாண்டிய தகுதிகள் பயன் தருவதில் வெகு சிக்கனம்.(ஆணுக்கு) 20-30 வயதில் திருமணம் தரும் பயன் 50-60 வயதில் திருமணம் தருவதில்லை .

ஒரு சமயம் ஒருவர் ஒரு திசையை நோக்கித்தான் முன்னேறிச் செல்ல முடியும். எல்லாத் திசைகளிலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது வட்டப்பாதையாக அமைந்து மீண்டும் தொடங்கிய இடத்தையே வந்தடைய நேரிடும் .

நேரான வழியில் முன்னேறுவதற்கான அறிவுரைகள், எடுத்துக்காட்டுகளை விட இன்றைக்குத் தவறான வழியில் நடப்பதற்கான அறிவுரைகளும்,எடுத்துக்காட்டுகளுமே நம்மை அதிகம் எட்டுகின்றன .வாழ்க்கைத் தரம் மேலும்மேலும் குறைந்து போவதற்கு இது ஓர் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது என்பதை இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை.திருந்தங்களைப் புகுத்தி திருத்தப்படாத சமுதாயம் வளர்ந்து விட்டால் அதுவே சாகாத சமுதாயத்திற்கு அழிக்க முடியாத எதிரியாகி விடும் .அப்புறம் ஒட்டு மொத்த சமுதாயமும் அழிந்து புதிய சமுதாயம் உருவானால்தான் உண்டு .

எல்லா மாற்றங்களும் உடனடிப் பயனைத் தருவதில்லை .உடனடிப் பயனைப் பெறுவதற்காகவே மாற்றங்கள் எப்போதும் மேற்கொள்ளப் படுவதில்லை .உடனடிப் பயனைத் தரும் சில மாற்றங்களைக் கண்டு பழகிவிட்ட பின்பு எல்லா மாற்றங்களும் அப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் போது ஏமாறுவது நாம் தான் என்றாலும் ஏமாற்றுவது மாற்றமில்லை .

No comments:

Post a Comment