Wednesday, August 14, 2013

Vethith Thanimangal-Chemistry

வேதித்தனிமங்கள் -ஆண்டிமணி -தொடர்ச்சி 
பயன்கள் 
ஆண்டிமணி உலோகக் கம்பி வெப்பமின் இரட்டையில் ஒரு கம்பியாகப் பயன்படுகின்றது .ஆண்டிமணி-பிஸ்‌மத் உலோகக் கம்பி களாலான வெப்பமின் இரட்டை மிக உயரளவு வெப்பமின்னியக்கு விசையைத்(thermo emf) தருகின்றது.பல வெப்ப மின் இரட்டைகளை ஒரு தொடரிணைப்பில் இணைத்து அவற்றின் ஒரு முனைகளை ஒரு பக்கமாய் குவித்து அதில் அகச்சிவப்புக் கதிர்கள் விழுமாறு செய்து வெப்ப மின் இயக்கு விசையை ஏற்படுத்தும் விளைவுகளினால்,விழும் அகச்சிவப்புக் கற்றையின் செறிவை மதிப்பிடமுடியும் .இதை வெப்ப மின் அடுக்கு(Thermopile) என்பார் . ஆண்டிமணி பல கலப்பு உலோகங்களில் பங்கேற்றுள்ளது .இவற்றுள் டைப் உலோகம்(type metal) ,லினோ டைப் உலோகம்,பிரிட்டானியா உலோகம்,எதிர் உராய்வு உலோகம்(anti friction alloy) போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .இதன் சேர்மானம் ஈயத்‌திற்கு கடினத் தன்மையையும், பட்டறைப் பயனுக்கு இணக்கத்தையும் தருகின்றது .மின் வடங்களுக்கு உறையிடும் பொருளாக இதன் கலப்பு உலோகங்கள் பயன்தருகின்றன .
கரைவுறா மஞ்சள் நிற ஆண்டிமணி பென்டா ஸல்பைடு ஒரு நிறமிப் பொருளாகவும் இரப்பரை கடினப்படுத்தும் வழிமுறையிலும் பயன்படுகின்றது ஆண்டிமணி ட்ரை ஸல்பைடு ஒரு நிறமிப் பொருளாகவும் தீக்குச்சி ,வான வேடிக்கைகளுக்கான வெடிகள் செய்யவும் பயன்தருகின்றது.ஆண்டிமணி பொட்டாசியம் டார்ட்ரேட்டை,டார்ட்டர் வாந்தி மருந்து (tartaremetic) என்றே அழைப்பர்.கரைவுறு வெண்ணிறப் பொடியாக இருக்கும். இது நச்சுத் தன்மை கொண்டது.இதைச் சாயத் தொழிலில் அரிகாரமாகவும் பயன்படுத்துவார்கள் ஆண்டிமணி சல்பேட் ஒரு வெடி பொருளாகப் பயன்படுகின்றது .
இன்டியம் ஆண்டிமோனைடு என்ற கூட்டுப் பொருள் ஒரு குறைக்கடத்தி

(Semiconductor), அகச் சிவப்பு ஆய்கருவிகளில் பயன்படுகின்றது.வேறு எந்த கூட்டுப் பொருள் குறைக் கடத்திகளை விட இதற்கு மின் கடத்து நிலைக்கும் கடத்தா நிலைக்கும் உள்ள இடைவெளி மிக மிகக் குறைவாகும்.இதனால் மிக எளிதாக ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றம் செய்ய முடிகின்றது .ஹால் விளைவு(Hall effect) பற்றி ஆராய்வதற்கும் ,இரு முனைக் குறைக் கடத்திகளை(diode) உற்பத்தி செய்வதற்கும் தூய ஆண்டிமணி,தொழில் நுட்பத் துறையில் பயன்படுத்தப்படுகின்றது.சில ஆண்டிமணி கூட்டுப் பொருட்கள்,வர்ணங்கள், பீங்கான் பொருட்கள், கண்ணாடி போன்ற பொருட்களின் உற்பத்தி முறையில் கையாளப்படுகின்றன  

No comments:

Post a Comment