Wednesday, May 16, 2012

Vethith thanimangal -Chemistry

வேதித் தனிமங்கள் ஆக்சிஜன் (Oxygen)
ஆக்சிஜன் மிகவும் முக்கியமான பூமியில் செழிப்புடன் கிடைக்கக் கூடிய ஒரு தனிமம் வளி மண்டலக் காற்றில் நைட்ரஜனுக்கு அடுத்து செழிப்புற்றிருப்பது ஆக்சிஜன்.இதன் செழுமை (பரும அளவில்) 20.95 % .நீர் மண்டலப் பகுதியில் ஆக்சிஜனின் செழுமை (எடை அளவில்) 85.89 % பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கும் கனிமங்களில் ஆக்சைடாகக் கிடைக்கிறது. அந்த வகையில் இதன் செழுமை (எடை அளவில்) 49.13 %. மனித உடலில் 3 ல் 2 பங்கும் ,நீரில் பத்தில் 9 பங்கும் ஆக்சிஜனாகும்.
காரெல் வில்கெம் ஷீலே (C .W .Seheele) என்ற ஸ்வீடன் நட்டு வேதியியலார் 1774 ல் குளோரின் மற்றும் மாங்கனீசைக் கண்டுபிடித்தார்.1778 ல் மாலிப்பிடினத்தைக் கண்டுபிடித்தார்.1772 ல் இவர் ஆக்சிஜனை அறிந்திருந்தார்.கனிமச் சேர்மங் களைப் பகுத்து இவர் ஆக்சிஜனைப் பல வழிமுறைகளில் உற்பத்தி செய்து காட்டினார்.ஆக்சிஜனின் சில முக்கியமான வேதியியல் பண்புகளைக் கண்டறிந்து தெரிவித்தார். ஆனால் இவருடைய கண்டுபிடிப்புகள் யாவும் 1774 ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான ப்ரிஸ்ட்லே (J .Priestely)ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்ததாக வெளியிட்ட பின்னரே கால தாமதமாக வெளியிடப்பட்டதால் கண்டுபிடிப்பின் பெருமையையைப் பெறமுடியவில்லை. ப்ரிஸ்ட்லே பாதரச ஆக்சைடைச் சூடுபடுத்தி அதிலிருந்து வெளியேறும் வளிமம் எரியும் மெழுகுவர்த்தியை மேலும் பிரகாசமாக எரியத் தூண்டுவதாகக் கண்டார் .இந்த வளிமத்திற்கு லவாய்ச்சியர் என்ற பிரான்சு நாட்டு வேதியியலாரே ஆக்சிஜன் எனப் பெயரிட்டார் .கிரேக்க மொழியில் ஆக்சிஸ் என்றால் அமிலம் என்றும் ஜென் என்றால் உற்பத்தி செய்பவர் என்றும் பொருள். உற்பத்தி செய்தல் பாதரச ஆக்சைடு மட்டுமின்றி வெள்ளி,தங்கம்,பிளாட்டினம் இவற்றின் ஆக்சைடுகளை சூடுபடுத்தியும் ஆக்சிஜனைப் பெறலாம். எனினும் பெரும்பாலான உலோக ஆக்சைடுகள் சூடுபடுத்தும் போது ஆக்சிஜனை வெளியேற்றுவதில்லை. மாங்கனீஸ் டை ஆக்சைடு ,பேரியம் பெராக்சைடு செவ்வீ யம்போன்ற உயர் ஆக்சைடுகளைச் சூடுபடுத்தியும் ஆக்சிஜனைப் பெறலாம்.மாங்கனீஸ் டை ஆக்சைடை அடர்மிகு கந்தக அமிலத்தில் இட்டு சூடுபடுத்த உடனடியாக ஆக்சிஜன் வெளியேறுகிறது.அமிலமிட்ட நீரை மின்னாற் பகுக்க ஆக்சிஜன் நேர் மின் வாயில் வெளியேறுகிறது.

No comments:

Post a Comment