Saturday, May 12, 2012

நைட்ரஜன் நிலைப்படுதல் என்றால் என்ன ? வளி மண்டலத்தில் நைட்ரஜனின் செழுமை எப்படி மாறாதிருக்கிறது ? நைட்ரஜன் நிலைப்படுதல் வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன் நிலத்தில் ஒரு நிலையில்லாத நைட்ரஜன் கூட்டுப் பொருளாகப் படியும் வழிமுறையே நைட்ரஜன் நிலைப் படுதல் எனப்படுகிறது.
மேகங்களுக்கிடையே உராய்வின் காரணமாக மின்னூட்டம் பெற,அவை பின்னர் மின்னிறக்கத்தில் ஈடுபடுகின்றன. அதையே மின்னல் என்று நாம் குறிப்பிடுகின்றோம்.இதில் வெளிப்படும் ஆற்றல் ஈரணு நைட்ரஜன் மூலக்கூறைப் பகுத்து விடுகிறது.தனித்த நைட்ரஜன் ஆக்சிஜனுடன் இணைந்து NO என்ற நைட்ரஜன் ஆக்சைடு NO2 என்ற நைட்ரஜன் டை ஆக்சைடு போன்றவற்றை உற்பத்தி செய்கின்றது.பெரும்பாலான நைட்ரஜன் டை ஆக்சைடு மழை நீரில் கரைந்து நிலத்தை அடைகிறது.அங்கு நைட்ரஜனை நிலைப்படுத்தும் ஒரு வகை பாக்டீரியா (சையனோ பாக்டீரியா )புரோட்டீன்,அமினோ அமிலங்கள் போன்ற சத்துப் பொருட்களை உருவாக்க,அதைத் தாவரங்கள் வேர்கள் மூலம் உட்கவர ,அதை உணவாகக் கொள்ளும் மனிதர்களுக்கும்,விலங்கினங்களுக்கும் புரோட்டீன் கிடைக்கிறது. நைட்ரஜன் வளர்சிதை மாற்றத்தில் வெளியேறும் உடற் கழிவுகளையும் சிறுநீரையும் அமினோ அமிலங்களாகவும் அமோனியாகவும் நிலத்தில் நிறைந்துள்ள நுண்ணுயிரிகள் மாற்றிவிடுகின்றன.நைட்ரஜனைப் பகுக்கும் அதே பாக்டீரியாக்கள் இந்தச் சேர்மங்களைப் பகுத்து நைட்ரஜனை விடுவித்துவிடுகிறது.இது மீண்டும் வளி மண்டலத்தில் சேர்வதால்,வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனின் செழுமையின் சராசரி மதிப்பு மாறாதிருக்கிறது.
இயற்கையாக நைட்ரஜனை நிலைப்படுத்தும் மற்றொரு வழிமுறை வயலில் பயறு வகைகளைப் பயிரிடுவதாகும்.சோயா பீன்ஸ்,புற்கள் போன்றவற்றிலுள்ள வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் ஒரு வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. இது நைட்ரஜநேஸ் என்ற ஒரு நொதிமத்தை உற்பத்தி செய்து நிலத்தில் உறைந்துள்ள நைட்ரஜனை நேரடியாக அமோனியாவாக மாற்றி விடுகிறது.இது எப்படி நிகழ்கிறது என்பது இன்னும் முழுமையாகத் தெளிவுபடாமல் இருப்பினும் ,மண்ணின் வளத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு சுற்று முறையில் இந்த வகைத் தாவரங்கள் வளர்க்கப் படுகின்றன. ,

No comments:

Post a Comment