Monday, May 21, 2012

Vethith thanimangal- Chemistry

வேதித் தனிமங்கள் ஆக்சிஜன்-பயன்கள் ஆக்சிஜன் - அசிடிலின் வளிமங்களை ஊதி எரியச்செய்து உலோகங்களை வெட்டவும்,பற்றவைத்து ஒட்டவும் பயன்படுத்து கிறார்கள்.இது 3300 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை வரை தரவல்லது.ஆக்சிஜன்-நைட்ரஜன் எரி வளிமங்கள் பிளாட்டினம் சிலிகா போன்றவைகளுக்குப் பயன் தருகிறது.இது 2400 சென்டிகிரேடு வரை வெப்பநிலை தரவல்லது.இயல்பாக வாழும் சூழலை விட்டு வேறுபட்ட சூழல்களில் பணிபுரிவோருக்கு ஆக்சிஜன் ஊட்டம் தேவையாக இருக்கிறது.மலை ஏறுபவர்கள், விமானங்களில் பயணிப்போர்,கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்வோர்,விண்வெளி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணி புரிவோர், சுரங்கங்களில் வேலை செய்வோர்,நோயாளிகள் போன்றவர்களுக்குத் சுவாசித்தலுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்க இது பயன் தருகிறது. நீர்ம ஆக்சிஜனை கரிப் பொடியுடன் கலக்க அது ஒரு வெடி பொருளாகின்றது.
சின்னக் குப்பியில் சோடியம் குளோரேட்டையும் இரும்புத் துருவல்களையும் போட்டு விமானத்தின் ஒவ்வொரு இருக்கைக்கு அருகாமையிலும் வைத்திருப்பார்கள்.ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டால் புறத் தூண்டுதல் மூலம் வெடிக்கச் செய்து இரு வேதிப் பொருட்களையும் கலக்க வைத்து,ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றார்கள்.இன்றைக்கு ஆக்சிஜனை ஓரிடத்தில் உற்பத்தி செய்து,குழாய் மூலம் ஒவ்வொரு இருக்கைக்கும் அனுப்புகின்றார்கள்.மருத்துவ மனைகளில் செயற்கைச் சுவாசத்திற்கு ஆக்சிஜன் கலந்த வளிமங்கள் பயன்தருகின்றன. அமோனியா, மெதனால், எதிலின் ஆக்சைடு போன்ற வளிமங்களின் தொகுப்பாக்க முறையில் ஆக்சிஜன் பயன் படுகிறது. ஆக்ஸிஜனேற்ற வினைக்குத் தேவையான ஆக்சிஜனைத் தரக்கூடிய பொருளை ஆக்ஸிமம்(Oxidant) என்பர். ஏவுகணைகளில் எரிபொருள் எரிவதற்குத் தேவையான ஆக்சிஜனை வழங்கும் பொருளையும் ஆக்ஸிமம் என்பர். பொதுவாக ஏவுகணை ,எவூர்திகளில் நீர்ம ஆக்சிஜன்,ஹைட்ரஜன் பெராக்சைடு அல்லது நைட்ரிக் அமிலம் ஆக்ஸிமம் ஆகக் கொள்ளப்படுகின்றன. உடலில் வளர் சிதை மாற்ற வினைகள் நடைபெறும் போதும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகத் தற்காப்பு செய்யும் போதும் தனித்த பகுதி மூலக்கூறுகள்(free radicals)உற்பத்தி செய்யப்படுகின்றன.மாசற்ற சுற்றுச் சூழலுக்கு அதிகம் இலக்காகும் போதும்,புற ஊதக் கதிர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் போதும்,புகைக்கும் போதும், நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் தனித்த வீரியமான பகுதி மூலக்கூறுகளின் அளவு உடலில் அதிகரிக்கிறது. இதை அப்படியே விட்டுவிட்டால் இந்த நிலையற்ற தீமை பயக்கின்ற வேதிப் பொருள் ,இதய நோய் ,புற்று நோய்களைத் தூண்டுகிறது. இதைச் சரிக்கட்ட உடலுக்குத் தேவைப் படுவது எதிர் ஆக்ஸிமம் (anti oxidant ) ஆகும். உடல் இயற்கையாகவே எதிர் ஆக்ஸிமங்களை உற்பத்தி செய்கிறது. என்றாலும் இயல்பு மீறிய சூழ்நிலைகளில் அவை போதாமல் போய்விடுகின்றன. அதனால் எதிர் ஆக்ஸிமம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.வைட்டமின் E,வைட்டமின் C,கரோட்டீன் என்ற வைட்டமின் A,தனிமங்களுள் செலினியம்,செம்பு,துத்தநாகம்,திராட்சைப் பழத்திலுள்ள பிளாவோனாய்டு (flavonoids) எதிர் ஆக்ஸிமம் பண்பைக் கொண்டுள்ளன.

No comments:

Post a Comment