Saturday, June 16, 2012

Social awareness- Mind without fear

மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம் உடலில் ஊனமிருந்தாலும் ,மனதளவில் எந்தப் பாதிப்புமின்றி இயல்பான மனிதர்களைக் காட்டிலும் வெகு சிறப்பாக வாழ்ந்து சாதனை செய்து சாதித்துக் காட்டியவர்கள் உலகில் பலருண்டு .போலியோவால் உறுதியில்லாத கால்களைக் கொண்டிருந்த வில்மா ஒலிம்பிக் போட்டிகளில் ஓடி, சக வீரர்களையும் முந்திச் சென்று பதக்கங்களைப் பெற்றார் .ஒருவேளை அவர் மற்றவர்களைப் போல உறுதியான கால்களைப் பெற்றிருந்தால் இந்த அளவு மன உறுதியை வளர்த்துக் கொள்ள தவறி வெற்றி வாய்ப்பை வெளிப்படுத்திக் காட்ட முடியாது போயிருக்கலாம் ஒரு தோல்வி,ஒரு இழப்பு பாடமாக ஏற்றுக்கொள்ளப்படும் போது அந்தத் தோல்வியை முறியடிக்கும் திறனைத் தருகிறது, இழப்பை மீட்டுப் பெறும் முறையை கற்றுக் கொடுக்கிறது.தோல்வியையே தோல்வியாக்கி விட்டால் வெற்றி கூடுதல் சிறப்புடன் வெளிப்பட்டே தீரும் என்பது இவருடைய வாழ்க்கை நமக்குக் கூறும் அறிவுரையாகும். எனவே மாணவர்களே தோல்வியால் துவண்டு போய்விடாதீர்கள்.தேர்வில் தோல்வி என்பது ஒரு நிகழ்வின் தற்காலியமான ஒரு முடிவு அதுவே வாழ்கை முழுவதையும் தீர்மானிக்கக் கூடிய இறுதித் தீர்ப்பில்லை காதல் தோல்வி கூட அப்படிப்பட்டதுதான்.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததும்,காதலுக்குப் பின்னால் மாறுதலாக நடந்து கொள்வதும் .காதலோடு மற்றொன்றையும் இணைப்பதும் முழுமை இல்லாத காதலாகி காதல் தோல்வியில் போய் முடிகின்றது.காதல் என்பது இருமனம் சம்பந்தப்பட்டது ,அதில் ஒரு மனம் மட்டுமே முடிவெடுக்குமானால் அது பெரும்பாலும் சரியில்லாமலும் இருக்கலாம்.ஒருவருடைய தோல்விக்குப் பல காரணங்களில் எதாவது சில காரணமாக இருக்கலாம்.அதை ஆராய்ந்து களைந்தெறிந்து வெற்றிக் கனியைச் சுவைப்பது என்பது கற்ற கல்விக்குப் பெருமை ,வாழ்க்கைக்கு இனிமை,சாகாத சமுதாயத்திற்கு வலிமை. கால்களே இல்லாத நிக் உழைக்கக் கைகளின்றி தன்னாலும் வாழ முடியும் என்று எல்லோருக்கும் எடுத்துக் காட்டாய் வாழ்ந்து வருகிறார்.உலகத்தின் பாரவையைத் தன் பக்கம் திருப்பி சிந்திக்கத் தூண்டியிருக்கிறார் .சிறுவயதில் ஒருமுறை கீழே விழுந்து தானாக எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.யாரும் அவரை த் தூக்கி விடவில்லை.பின் அவரே கற்றுக்கொண்டார் தனக்கிருக்கும் வசதிகளைக் கொண்டு எப்படி தனக்குத் தானே எழுந்திருப்பது என்பதை.அடுத்தவர்களுடைய உதவி என்பது வேறு.ஆனால் ஒவ்வொருவரும் தங்களுடைய தேவைகளை த் தங்களாகவே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டவுடன் அவருடைய வாழ்கையில் வசந்தம் வரத் தொடங்கியது. துடுப்பே இல்லாமல் படகை ஓட்டி கரை சேர்ந்தவர்கள் இவர்கள்,துடுப்பிருந்தும் நடுக் கடலில் தடுமாறுவார்கள் மனச் சோர்வுற்ற மாணவர்கள்.கரை சேர வேண்டுமானால் துடுப்பு மட்டும் போதாது மனதில் துடிப்பும் வேண்டும்.மனத்தைக் கலகலப்பாகிக் கொள்ளுங்கள் அப்பொழுதான் உங்கள் மனம் உங்களுக்கே நண்பனாக இருக்கும்.

No comments:

Post a Comment