Wednesday, April 3, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 22

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?  
ஒரு மாணவன் தன் திறமைகளை அறியாவிட்டால்  முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகளை இழந்துவிடுவான் என்பதை கோழிக்குஞ்சோடு சேர்ந்து பொரி க்கப்பட்ட பருந்துக் குஞ்சின் நிலை எடுத்துக் காட்டுகின்றது . 
ஒரு கோழி 9  முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது.  ஆவலில் ஒரு சிறுவன் அந்த முட்டைகளோடு ஒரு பருந்து முட்டையையும் வைத்துவிட்டான் . கோழி 10 முட்டைகளையும் அடைகாத்து குஞ்சு பொரித்தது. பருந்துக் குஞ்சும் கோழிக் குஞ்சுகளுடன் சேர்த்து   குப்பைகளைக் கிளறி  தானியங்களை கொத்திக் கொத்தி தின்று   வளர்ந்து வந்தது. அதற்குத் தானொரு பருந்துக் குஞ்சு என்பதே தெரியவில்லை . தானும் ஒரு கோழிக் குஞ்சு என்றே நினைத்துக் கொண்டிருந்தது. பருந்துகள் கோழிக் குஞ்சுகளைக் கொத்தி எடுத்துச்செல்ல பறந்து வரும் போது தாய் கோழி  வீரமாய் விரட்டி அடிப்பதைப்  பார்த்துவிட்டு   பருந்துக் குஞ்சு தானும் அந்தப்  பருந்து போல உயரப் பறக்க ஆசைப்பட்டு கோழியிடம் போய் முறையிட்டது.  அதற்கு  "பருந்துகளால் மட்டுமே  அப்படி  உயரத்தில் பறக்க முடியும். கோழியாய்ப் பிறந்த நமக்கு பருந்து போலத் திறமையில்லை .நம்முடைய திறமை குப்பையைக் கிளறி உணவு தேடுவதுதான்"  என்று கோழி சொன்னது. பருந்துக் குஞ்சும் உயர பறக்கும்  பருந்தை ஏக்கமாகப் பார்த்து விட்டு மற்ற கோழிக் குஞ்சுகளோடு தத்தித் தந்திச் சென்றது. பருந்துக் குஞ்சு தானொரு  பருந்து என்பதை உணராமல் போனதால், அது கடைசிவரை கோழியாகவே வாழ்ந்து மறைந்தது .             
  திறமைகளை வெளிப்படுத்திக் காட்டுவதற்கான வாய்ப்புக்களை வெகு இயல்பாகப் பெறுவதற்கு உங்கள் வளர்ச்சியில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்களின்   நட்பை   வளர்த்துக் கொள்ளவேண்டும். நல்லொழுக்கம் , நேர்மை , மனிதநேயம் , படைப்பாற்றல் போன்ற தனித்திறமைகளால் நல்லோர்களின் நட்பைப்  பெறமுடியும். காற்றடைக்கப்பட்ட பலூன் இதைத்தான் அறிவுறுத்திக் கூறுகின்றது .
ஒரு பலூன் மேலெழும்பிச் செல்வதற்கு  அந்த பலூனின் நிறம் காரணமாக இருப்பதில்லை . சிவப்பு நிறமாக இருந்தாலும், கருப்பு நிறமாக இருந்தாலும் . சிறியதாக இருந்தாலும் , பெரியதாக இருந்தாலும் , காற்றைக்கப்பட்டால் அவை எல்லாம் மேலெழும்பிச் செல்வதை போல , நிறம், மதம், மொழி , இனம் என்ற வேறுபாடுகளின்றி எல்லா மாணவர்களும் திறமையால் முன்னேறிச் செல்லலாம். பலூன் மேலெழும்பிச்  செல்வதற்கு அதனுள் அடைக்கப்பட்ட வளிமமே காரணம்..அது மிகுதியாக இருக்கும் போது ,மிதத்தல் விதி (Laws of floatation )காரணமாக , ஒரு மேல்நோக்கு விசையைப் ( upward bouyancy) பெற்று உயரச் செல்கின்றது  மாணவர்களின் முன்னேற்றமும்  இது போன்றதே . அவர்களின் திறமை என்பது பலூனில் அடைக்கப்பட்ட வளிமம் மற்றும் அதன் அளவைப்  போன்றது .  பலூன்   மேலெழும்ப கீழ் நோக்கிச் செயல்படும் எடையை  எதிர்த்துச் செயல்படவேண்டும் . அது போல ஒரு மாணவன் முன்னேற வேண்டுமானால் அதற்குத் தடையாக இருக்கும் பிரச்சனைகளை திறமையால் எதிர்த்து சமாளிக்க வேண்டும் . கூடுதல் திறமை பிரச்சனைகளை எளிதில் தீர்வு செய்துவிடுகிறது . வளிமம் அடைக்கப்பட்டிருப்பதால் தான் பலூன் மேலெழும்பிச்  செல்ல த் தேவையான மேல் நோக்கு விசையைப் பெறுகின்றது . அதுபோல தனித் திறமைகள் இருந்தால் முன்னேறிச் செல்லத் தேவையான நம்பிக்கை மட்டுமில்லாது பிறருடைய உதவிகளும் தானாக வந்து சேரும் . 
ஒருவருடைய திறமைகள் அவருக்கே தெரியாவிட்டால் , அந்தத் திறமைகளால் அவருக்குப் பயன் ஏதுமில்லை . அவருக்கே பயன்படாத திறமைகள் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்த முடியாது .யாருக்கும்  பயனில்லாத ஒருவரை  சமுதாயம் மதிப்பதில்லை.  அதனால் திறமை இருந்தும் அதை வெளிப்படுத்திக் காட்டத் தெரியாத ஒருவர் , சமுதாயத்தோடு தொடர்ந்து தொடர்பு கொள்வதில் தயக்கம் காட்ட , இறுதியில்  அவருக்கு அவரே எதிரியாகி விடுகின்றார். 

No comments:

Post a Comment