Tuesday, April 23, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 38

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
ஒரு குழந்தை தானாகப் படிப்பதில் ஆர்வம் கொண்டு கல்வி தேடுதலை மேற்கொள்ளும் வரை பெற்றோர்கள் கூடவே இருந்து புரியக் கற்றுக் கொள்வதற்குத் துணைபுரியவேண்டும் . 
ஒவ்வொருநாளும் ஒரு வார்த்தை  என்று வரையறுத்துக் கொண்டு மொழியைக் கற்றுக் கொடுக்கலாம். சொற்களை கற்றுக்கொடுக்கும் போது சரியான உச்சரிப்பிலிருந்து தொடங்கி , மூலச் சொல் , மூலச் சொல்லிலிருந்து விரிவடையும் துணைச் சொற்கள்.அந்தச் சொற்களுக்கு இணையான வேற்றுச் சொற்கள் , எதிர்ச் சொற்கள்,சொற்களைக் கையாளும் போது ஏற்படும் பிழைகள், குறிப்பிட்ட சொல் மற்றும் அதன் துணைச் சொற்களைப் பயன்படுத்தி சொற்றொடர்களை ஏற்படுத்துதல்  போன்ற பயிற்சிகள் மூலம் கற்பித்தால் , மொழியறிவு விரிவடைவதுடன் , அந்தக் குழந்தை தானாகா அகராதிகளைப் புரட்டிப் பார்க்கும் பழக்கத்தை மேற்கொண்டு மொழியில் ஒரு புலமையைப் பெறுவதற்கு சுயமாக ஒரு வழியைத் தேடுகின்றது .  மொழியறிவு விரிவடைய குழந்தைகளைச் சிறுசிறு கட்டுரை எழுதத் தூண்டலாம் .  மொழியை மட்டுமின்றி தேவையான விவரங்களைப் பெற கணனியைப் பயன்படுத்தும் முறையையும் இளம் வயதிலேயே கற்றுக் கொடுத்து விட்டால் , கணனியைத் தவறான பயன்களுக்குப் பயன்படுத்துவது இயல்பாகவே  தடுக்கப்பட்டுவிடுகின்றது 
அவ்வப்போது படிப்பதற்கு இலக்கியம் , பொது அறிவு ,சரித்திரம் ,சுய முன்னேற்றம் தொடர்பான நூல்களை வாங்கி க் கொடுக்கலாம். .தானாக விருப்பப்பட்டு படிக்கும் வரை கூடவே இருந்து கண்காணித்து வழிகாட்டலாம் . புத்தகக் கண்காட்சி , அறிவியல் கண்காட்சி போன்றவற்றிற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல மறக்காதீர்கள் . குழந்தைகளுக்கு இந்த புறத் தொடர்பு  நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது . தானாக முன்னேறிச் செல்லத் தேவையான தூண்டற் காரணிகளைப் பெறுவதற்கு இது துணை செய்கின்றது.  
பொதுவாக குழந்தைகள் நூல்கள் மூலம் கல்வி கற்பதை விட விளையாட்டை அதிகம் விரும்புகின்றன . இதற்குக் காரணம் செய்முறைப் பயிற்சிகளாலான கல்வியை உட்கிரகித்துக் கொள்வது எளிதாக இருப்பதுதான் .காதை விடக் கண்களால் பெறும் கல்வி ஆழமாகப் பதிவதும் கூட ஒரு காரணமாகின்றது .எடுத்துக்காட்டாக சங்கீதம் , இசைக் கருவிகளை இசைத்தல் , படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் ,கலை பொருள் வடிதல் . பழுது நீக்கி சரிசெய்தல் , ரங்கோலி கோலம் போடுதல் ,சதுரங்கம் விளையாடுதல் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .இவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். படிப்பும் பொழுதுபோக்கான ஓய்வும் சம அளவில் இருக்க வேண்டும். படிப்பு இல்லாத போது நேரத்தை ப் பயனுள்ளவாறு பயன்படுத்திக் கொள்ள இந்த  செய்முறைக்கு கல்வி பலன்தரும் . தவிரவும் தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு நேரம் வீணாவதும் தவிர்க்கப்படும். 
குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே நன்னெறிகளை கற்பித்துவிடுங்கள். ஒளவையாரின்  ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் , நல்வழி  போன்றவற்றை  பொருத்தமான கதைகளுடன் சொல்லிக் கொடுங்கள். .ஒவ்வொருநாளும் குழந்தைகளுடன் கொஞ்ச நேரமாவது செலவிட ஒதுக்குங்கள் .
பெற்றோர்களால் முழுமையாகக் கவனிக்கப்பட்ட குழந்தை ஒருநாளும் தன் எதிர்கால வாழ்க்கையில் தோற்றுப்போவதேயில்லை 

No comments:

Post a Comment