Saturday, April 13, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 33

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
4, புற அறிவு மூலங்களைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். புற அறிவு மூலங்கள் என்பது எங்கும் கிடைக்கும் சூரிய ஆற்றல் மாதிரி நமக்குக் கிடைக்கும் பிறருடைய அறிவின் பயனாகும் .சூரிய ஆற்றல் , நாம் பயனில் கொள்ளும் பிற ஆற்றல்களைக் காட்டிலும்  அதிகமாகவும் , இலவசமாகவும்  கிடைத்தாலும் , குறைவாகவே பயன்படுத்திக் கொள்கின்றோம் . அதைப்போலவே , பெற்றோர்கள்,நண்பர்கள், ஆசிரியர்கள்  மட்டுமின்றி , நூலகங்கள் , கணனிகள் போன்றவைகளும் நமக்கு அருகில் இருந்தாலும் , நம்முடைய அறிவு வளர்ச்சிக்கு அவற்றை அதிகம் பயன்படுத்திக் கொள்வதில்லை.    
மனப்பாடமாய்ப் படித்து அதை அப்படியே ஒப்பிப்பதும் , எழுதுவதும் தேர்வில் மதிப்பெண் பெற்றுத் தரலாம் ஆனால் வாழ்க்கைக்கு மதிப்பூட்டாது . மதிப்பூட்டப்பட்ட வாழ்க்கை என்பது மதிப்பூட்டப்பட்ட(value added) அறிவை வளர்த்துக் கொள்வதில் அடங்கியிருக்கின்றது . எனவே செயல்திறன்மிக்க மறு மதிப்பீட்டு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றி அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். இளமைப் பருவம் என்பது கல்வி கற்று திறமையையும் , தகுதிப்பாட்டையும் வளர்த்துக் கொள்வதற்காகவே  இயற்கையால் வகுக்கப்பட்ட பருவம் . திறமைகளை வளர்த்துக் கொள்ள இந்தப் பருவத்தில் மட்டுமே  அதிக நேரத்தை செலவிட்டு முயற்சி மேற்கொள்ள முடியும்  . குடும்பம் மற்றும் சமுதாய ப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட  பின்னர் , கற்பதற்கும் ,மறு மதிப்பீடு செய்வதற்கும் , அதன் மூலம் பயனீடுவதற்கும் கிடைக்கும் காலம்  குறைவாகவே கிடைக்கும் என்பதால் அதிக கவனம் செலுத்தமுடியாது . இளைமைப் பருவத்திலும் , பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பின்னரும் , கிடைக்கும் பிற புற அறிவு மூலங்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும் . மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஆழ் கடலில் வலை வீசுவதைப் போல .ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான விவரங்களை பெற கூடுதல் விவரங்கள் அறிந்த ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினராக வரும் பேச்சாளர்கள் , நண்பர்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் . நூலகங்கள் , வலைத்தளங்களும் இன்றைக்கு  மிகுந்த பயனளிக்கின்றன. 
எடுத்துக்காட்டாக சரித்திர நிகழ்வுகளைப் பற்றி பாடத்தில் படித்து தெரிந்து கொண்டது  ஓரளவு மட்டுமே முழுமையானதாக இருக்கும் . முழுமையான விவரங்களைக் கொடுப்பதும் பாடத் திட்டங்களில்  சாத்தியமில்லை .ஒரு குறிப்பிட்ட சரித்திர நிகழ்வோடு தொடர்புடைய பிற விஷயங்களைத் தெரிந்து கொள்ள இந்த பிற அறிவு மூலங்கள் பயன்தருகின்றன . புற அறிவு மூலங்களிலிருந்து சேகரித்த விவரங்களைப் பதிவு செய்து குப்பை போல மூளையில்  அள்ளிப் போடாமல்  சரியான இடத்தில் அடுக்கி வைத்தால் , அதை எப்பொழுது வேண்டுமானாலும் நினைவு படுத்திக் கொண்டு பயனீட்ட முடியும் 

No comments:

Post a Comment