Tuesday, April 16, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 35

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
பல மாணவர்கள் தங்களிடம் இருக்கும் திறமைகளை அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள். எந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள இயல்பான ஈடுபாடு இருக்கின்றதோ அந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள விரும்பி முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும் . தகுதிக்கு மீறிய திறமைகளை அடைய பலவீனமான அடிப்படையுடன் முயற்சிக்கக் கூடாது.திறமையின் தரத்திற்கு ஏற்ப முயற்சி இருக்கவேண்டும் 
தன் திறமையைத் தானே அறியாமல் இருப்பதற்குக் காரணம்  பிறருடைய திறமைகளைக் கண்டு அதற்காக ஏங்குவதும் , ஒரு சில திறமைகள் மட்டுமின்றி எல்லோரிடமும் இருக்கும் எல்லாத் திறமைகளையும் தான் ஒருவனே பெறவேண்டும் என்று பேராசைப்படுவதும் ஆகும் .இதனால் ஒரு மாணவருக்கு தன்னிடம் உள்ள திறமையை அறிந்து கொள்வதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை .இவர்களுக்கு  எதிரில் இருப்பதைவிட , கண்ணுக்கு எதிரில் இல்லாதது தான் அதிகம் தெரியும் . கண்ணுக்குத் தெரிந்து கைக்கு எட்டும் பொருட்களை விட, மனக்கண்ணுக்குத் தெரியும் மாயப் பொருட்களே அதிக விருப்பமாய் இருக்கும் . கிடைத்ததை விட கிடைக்காததிற்காகவே அதிகம் ஏங்கி காலத்தையும், கிடைத்ததைப்  பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிடுவதால் திறமையையும் வீணாக்கி விடுகின்றார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற ஒரு திறமை அல்லது அதனுடன் தொடர்புடைய ஒரு சில திறமைகளில் திறமையை வளர்த்துக் கொணடாலே போதுமானது. 
ஒரு கையில்லாமல் உடல் ஊனமுற்ற ஒருவன் கராத்தே போட்டியில் வெற்றிவாகை சூடிய கதை இந்த உண்மையைத்தான் எடுத்துரைக்கின்றது .
ஒரு சிறுவன் கராத்தே வீரனாகா வரவேண்டும் என்று விரும்பினான். எதிர்பாராமல் நடந்த ஒரு சாலை விபத்தில் அவன் தன் இடது கையை இழந்த போது அவன் ஆசை நிராசையானது . மனம்தளராமல் , ஒரு குருவை அணுகி தான் விருப்பத்தைக்  கூறினான் . அவனுடைய ஆர்வத்தைக் கண்டு அவனுக்கு கராத்தே கற்றுத்தர ஒப்புக்கொண்டார். அவனுக்கு ஒரு கையால் தாக்குதல்களைத் தடுத்துக் கொள்ளும் தற்காப்பு  முறைகளைக் கற்றுக்கொடுத்து விட்டு  எதிரியைத் தாக்கும் வித்தைகளில் ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும்  கற்றுக் கொடுத்தார். பல மாதங்கள் தொடர்ந்து அதே பயிற்சியை மட்டும் மேற்கொண்டான். இதில் பயிற்சி போதும் வேறு வித்தைகளை கற்றுக்கொள்ள வேண்டாமா என்று கேட்ட போது . " போதாது, இன்னும் ஓரிரு மாதங்கள் இதில் சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொள். அது மட்டுமே போதுமானது " என்று குரு சொன்னார். அவனும் பயிற்சியை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினான். அந்த வருடம் அவ்வூரில் நடந்த கராத்தே போட்டியில் அவனும் கலந்து கொண்டான் .ஊனமுற்ற இவன் எப்படி வெற்றி பெறுவான் என்று எல்லோரும் கேலி செய்தனர் . இருந்தாலும் மனம் தளராமல் போட்டியில் கருப்பு  பட்டை வாங்கிய   பலசாலிகளான கராத்தே வீரர்களை வீழ்த்தி பரிசுக் கோப்பையை வென்றான்.  இது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. மறுநாள் தனக்கு கராத்தே கற்றுத்தந்த குருவிடம் சென்று இது எப்படி சாத்தியமானது என்று கேட்டான்.  "இரண்டு காரணங்கள். ஒன்று நீ வலது கையால் குத்தும் போது அதைத் தடுக்க உன் இடது கையை மடக்கிப் பிடிக்க வேண்டும் . உன்னிடம் இடது கை இல்லாததால் எதிரியால் சமாளிக்க முடியாது போனது. இரண்டாவது பொதுவாக எல்லோரும் இயல்பான சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைத் தயார் படுத்திக் கொள்வார்கள். இயல்பு நிலைக்கும் அப்பாற்பட்ட சூழ்நிலைகளை சமாளிக்கும் வித்தைகளை பொதுவாக யாரும் பயிற்சிக் காலத்தில் கற்றுக்கொள்வதில்லை. ஆனால் நீ அதை மட்டுமே கற்றுக் கொண்டு முழுத் தேர்ச்சி பெற்றாய். சந்திக்கும் சூழ்நிலை எதிர்பாராததாக இருந்ததால் எதிரிகள் எளிதாகத் தோற்றுப் போனார்கள்" என்றார்  குரு .   

No comments:

Post a Comment