Monday, April 29, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? - 48

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
நேரத்தைக் கழிப்பதற்காக மனிதர்கள் பிறப்பதில்லை . குறுகிய வாழ்நாளில் அரிய காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருக்க வேண்டும் .அது சமுதாயம் நிலைத்திருப்பதற்கு ஒவ்வொருவரும் கொடுக்கும் பங்களிப்பாகும்.  மண்ணில் மறைந்த பின்பும் மக்கள் மனதில் மறையாமல் வாழும் மாமனிதர்களின் பங்களிப்பு எங்ஙனம் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி வளப்படுத்தி இருக்கின்றது என்பதையும் அதனால் நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பலன்களையும் எடுத்துக் கூறி  ஒவ்வொரு மனிதனும் எதாவது ஒரு வகையில் சாகாத சமுதாயத்திற்கு பங்களிப்புச் செய்ய வேண்டியதின் முக்கியத்தை வலியுறுத்திக் கூற வேண்டும். 
படிப்பு என்பது வகுப்பில் முதலிடம் பெறுவதற்காக இல்லை , வாழ்க்கையில் முதலிடம் பெறுவதற்காக என்பதை பெரும்பாலான மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே புரிந்து கொள்வதில்லை . மதிப்பெண் வகுப்பில் முதலிடத்தைத் தரலாம் . ஆனால் பயன்படுத்திக் கொள்ளும் அறிவும் தனித்த திறமைகளும் தான் ஒரு மாணவனுக்கு வாழ்க்கையில் முதலிடத்தைத் தரும். பெரும்பாலான மாணவர்கள் வகுப்பில் முதலிடம் பெறுவது என்பது வாழ்க்கையில் முதலிடம் பெற்றது போல என்று நம்புகின்றார்கள் .ஒழுக்கமும் ,உயர்ந்த நோக்கமும்  , சமுதாய நலம் சார்ந்த  கல்வியும் எண்ணத்தில் நிலைத்திருக்கும் போது  வகுப்பிலும் ,வாழ்க்கையிலும் முதலிடத்தைத் தரும்.
நல்ல பழக்கங்களைப் பின்பற்ற  சமுதாயத்தை ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம் ஆனால் தீயபழக்கங்களை கற்றுக் கொள்ள சமுதாயம் ஒரு காரணமாக இருக்கக் கூடாது . நல்ல சமுதாயமோ ,தீய சமுதாயமோ அது தானாக உருவாவதில்லை , மனிதர்களால்  மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது.  இன்றைக்கு ஒவ்வொருவரும்  அக வொழுக்கத்தை  புறவொழுக்கத்திலிருந்து வேறுபடுத்தி மறைவொழுக்கமாகக் மேற்கொள்ளுவதால் சமுதாயம் மெல்ல மெல்லச் சீரழிந்துவருகின்றது .
தீய வழிகளில் முன்னேறிய  சமுதாயத்தை வெறுத்து அதை விட்டு தனித்துப் பிரிந்து  வாழ முடியாததால்  சமுதாயத்தைச் சீரழிக்கும் மனிதர்களைத் திருத்துவதைத் தவிர சிறந்த வழிமுறை ஏதுமில்லை . அது ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் செய்ய வேண்டிய கடமையுமாகும் .இந்தக் கடமையின் முக்கியத்துவம் கருதி  உலகில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள் எல்லோரும் இதைத்தான் செய்தார்கள். ஏனெனில் ஒரு தீய சமுதாயத்தில் இப்பொழுது வாழ்ந்து விடலாம் ஆனால் முதிர்ந்த தீய சமுதாயத்தில்  நமக்குப் பிறகு நம் வருங்காலச் சந்ததியினர் வாழவே முடியாத சூழ்நிலையே நிலவும் .   

No comments:

Post a Comment