Monday, April 29, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?-47

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
 சாகாத சமுதாயத்திற்கு இது நல்லது , இது கெட்டது என்பதைப் பகுத்தறிந்து  நல்லனவற்றைத் தேர்வுசெய்து பின்பற்ற அறிவு தேவை .அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள் பல உள்ளன , அவை ஒவ்வொன்றிற்கும் வேறுபட்ட தனிச் சிறப்புக்கள் இருந்தாலும் சுய தேவைக்கு ஏற்ப எல்லோராலும் எல்லா நிலைகளிலும் அவற்றைப் பயன்படுத்தி அறிவைப் பெறமுடியும். 
இந்த அறிவைப் பெறுவதற்கு இருக்கின்ற  முதலாவது வழியைப்  பட்டறிவு என்பர், எதையும் அனுபவப் பட்டு அறிந்துகொள்வதாகும் .  ஒருவர் தனக்குத் தானே கற்பிக்கும் ஆசிரியராகவும் , கற்றுக் கொள்ளும் மாணவராகவும் இருந்து கற்றுக் கொள்ளும் செய்முறை  வாயிலான கல்வி இது. அறிந்து கொள்ளும்போதே புரிந்தும் கொள்வதால்  ஆழமான பதிவுகளால் ஒருவர் அதைத் தன் வாழ்நாளில் மறப்பதேயில்லை. 
  நேற்றைய அனுபவம் இன்றைய ஆசிரியன் என்று சான்றோர்கள் கூறுவார்கள் .   ஆனால் வாழ்கைக்குத் தேவையான எல்லா அறிவையும் ஒருவர் வாழத் தொடங்குவதற்கு முன்பாக  தன் அனுபவத்தின் வாயிலாகவே பெறுவது என்பது  வாழ்நாள் காலத்திற்குள் இயலாததாகும்.
இரண்டாவது வகையான அறிவைப்  படிப்பறிவு   என்பர் . வாழ்க்கையில் நிறைந்த பட்டறிவினைப் பெற்ற அறிஞர்கள், ஆசிரியர்கள் , மூத்தவர்கள் எழுதிய நூல்களைப் படித்தும் பெறுவதாகும் .ஒவ்வொரு  அனுபவத்தையும் தானே பட்டறிவதற்குப் பதிலாக முன்னோர்களின் அனுபவங்களையே வழிகாட்டலாகக் கொண்டு பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்ட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு இது வழிவகுக்கின்றது .இதனால் கால விரயம் தவிர்க்கப்பட்டு  வாழ்க்கைப் பயணம் எளிதாகிறது .படிப்பறிவிற்காகச் செலவிடும் நேரம், தொகை , எல்லாம் நல்ல முதலீடுகளாகும். 
மூன்றாவது வகை சொல்லறிவு எனப்படும் . நூல்களைக் கற்கும் வாய்ப்பில்லாதவர்கள் , அந்நூலைக் கற்றுத் தேர்ந்த ஆசிரியர்கள் வாயிலாகக் கேட்டுப் பெறும் அறிவாகும். "கற்றிலன் ஆயினும் கேட்க " என்பது வள்ளுவம் . பட்டறிவையும் சொல்லறிவையும் பெறுவதற்கு ஒருவர் எவ்வளவு செலவு செய்கின்றாரோ அதைப்  போல பல மடங்கு  பயனீட்டமுடியும். 
பட்டறிவையும் சொல்லறிவையும் ஒரு குழந்தைத் தானாக விரும்பிச் செய்யுமாறு செய்வதற்கு சில வழிகள் இருக்கின்றன. இது நம்முடைய கல்வி முறையில் கூட பின்பற்றப்படுகின்றது . அகர வரிசையில் நன்னெறிகளைச் சொல்லும்  ஆத்திச்   சூடி , கொன்றை வேந்தனை ஆறு வயதில் படித்தாலும் நூறு வயதில் கூட மறப்பதில்லை.  புத்திசாலித்தனமான பெற்றோர்கள் இதைப் பின்பற்றி குழந்தைகளுக்கு மிக எளிதாகக் கற்றுக்கொடுக்கின்றார்கள். பாடம் எளிய பாடல் வரிகளாக இருந்தால் , எதுகை மோனையுடன் சொல்லப்பட்டால் , பட விளக்கத்தையும் காட்டினால், குழந்தைகள் மிக விரைவாகவும் விருப்பத்துடனும் கற்றுக்கொண்டு விடுகின்றன. இதற்குக் காரணம் இயலோடு இணைத்த இசையாகும். இசை மீது மனம் கொண்டுள்ள இயற்கையான பிரியத்தை கல்வி கற்பதில் பயன்படுத்தினால் இசையோடு சேர்ந்து கல்வியும் கற்றுக்கொள்ளப்பட்டு விடுகின்றது.

No comments:

Post a Comment