Thursday, April 25, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? -41

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
பள்ளிக்குச் செல்லும் போது அன்றைக்கு நடக்கும்  வகுப்புகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களையும் ,குறிப்பெழுதும் நோட்டுக்களையும், எழுதுவதற்குத் தேவையான பேனா ,பென்சில்களையும்  சரி பார்த்து எடுத்துச் செல்லவேண்டும் .மறந்துவிட்டோம் என்று இழப்புக்களை ஏற்றுக்கொள்ளக்க கூடாது  இது மறதியை அதிகப்படுத்தும் . மறதி என்பது கவனக் குறைவின் வெளிப்பாடே . அக்கறையின்மையும் , ஒரே சமயத்தில் பலவற்றில் அக்கறை கொள்வதும் மறதியைத் தூண்டுகின்றது . மறதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் ,பழக்க வழக்கங்களை ஒவ்வொருமுறையும் முன்திட்டமிட்டு அதன்படி பின்பற்றிவரும் பழக்கத்தை அக்கறையுடன் மேற்கொள்ளவேண்டும்.
எப்படி வீட்டிலிருந்த பள்ளிக்குச் செல்லும் போது  புத்தகங்களையும் பிற பொருட்களையும் சரியாக எடுத்துச் செல்கின்றோமோ அது போல பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போதும் சரி பார்த்து  எடுத்துச் செல்லவேண்டும். 
வகுப்பில் அமர்வதில் கூட ஒரு ஒழுக்கம் இருக்கவேண்டும். எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம் என்ற சுதந்திரம் இருக்குமானால் , ஆசிரியரை கரும்பலகையில் எழுதுவதை பார்க்கக் கூடியவாறு , விளக்கிக் கூறுவதை  கேட்கக் கூடியவாறு அருகில் அமர்வது நல்லது. வெளியில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கத் தூண்டி  கவனத்தை எளிதில் சீர்குலைக்கும் அமைவிடங்களைக்  குறிப்பாக  ஜன்னலோரமாக , அல்லது கதவோரமாக  இருப்பதைத் தவிர்க்க வேண்டும். 
வகுப்பில் கவனமாக இருந்து நடத்தும் பாடங்களை ப் புரிந்து கொண்டால் , வீட்டில் திரும்பப் படிக்கும் போது முழுமையாகப் புரிந்து கொள்வது எளிதாக இருப்பதுடன் , அதற்கு  அதிக நேரமும் ஆவதில்லை .வகுப்பில் படம் நடத்தும் போதே முழுமையாகப் புரிந்து கொண்டால், வீட்டில் படிக்க வேண்டிய அவசியம் கூட இருக்காது . கல்வியில் சிறந்து விளங்க மன உறுதியுடன் அர்பணித்துக் கொண்டால்  அந்த அர்ப்பணிப்பு ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் இயல்பாகத் தோன்றி , சாதனைகளைக் கூட எளிய செயல்களாக்கிவிடும்.
வகுப்பில் கவனிக்க த்  தவறினால்  அந்தப் பாடம் புரியாமல் போகும். மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்து கொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், பிறவற்றைப் படிப்பதற்கு அல்லது பிற வேலைகளைச் செய்வதற்கு நேரம் குறைவாகும் . ஒரு பாடம் புரியாவிட்டால் , அதைத் தொடர்ந்து படிக்கும் ஆர்வம் குறையும் . அரைகுறையான கல்வி திறமையை வளர்ப்பதற்கு உதவுவதில்லை. 
கல்வியில் ஆர்வமின்மைக்கு அடிப்படையான காரணம் ஏதோவொன்று மனதில் இருக்க வேண்டும்.      
வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அருகில் அமர்ந்திருக்கும் மாணவரோடு பேசுவது, தொலைவில் அமர்ந்திருக்கும் மாணவருக்கு ஒரு துண்டுச் சீட்டில்  குறிப்பெழுதி அனுப்பிவைப்பது, பிற பாடங்களுக்கான வீட்டுப் பயிற்சியை செய்வது , வெளியில் நோட்டமிடுவது போன்ற பல காரணங்களினால் ஒரு மாணவரது கவனம் தவறிப் போகலாம் .வீட்டில் அதிக நேரம் விளையாடுவது, உறங்குவது , புரிதலின்றிப் படிப்பது , தேவையில்லாத வற்றில் அக்கறை கொள்வது போன்ற பல காரணங்களினால் கவனம் திசை மாறிப் போகலாம்.  
அடிப்படையான இந்த அகவொழுக்கத்தை ஒரு குழந்தைக்கு பெற்றோர்கள் மட்டுமே முழுமையாகக் கற்பிக்க  முடியும்     

No comments:

Post a Comment