Monday, April 22, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 36

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
பிறர் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கும் , பிறருக்குத் தன் தேவைகளைப் புரியச் சொல்லவும்  இருவருக்கும் பொதுவான ஒரு மொழியே பயன்படுகின்றது. மொழிக்கு முன்னர் வெறும் சைகைகளே செய்திப் பரிமாற்றத்திற்குப் பயன்பட்டது என்றாலும் . விரைவாகவும், கூடுதலாகவும்  பயனுறு திறன்மிக்க முறையில் செய்ய மொழி அவசியமாகின்றது . அதனால் பிறந்தவுடன் ஒரு குழந்தை வளர ஆரம்பிக்கும் போது முதலில் கற்றுக்கொள்வது தாய் மொழியைத்தான்.  ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்கு உயிர் வாழ பாலோடு , மொழியையையும் சேர்த்தே ஊட்டுகின்றாள். தாய்மொழியைக் கற்பிக்க இயற்கையால்  நியமிக்கப்பட்ட  முதல் ஆசிரியரே தாய் .
ஒரு குழந்தை முதலில் கற்றுக்கொள்ள கற்பிக்கப்படவேண்டியது  தாய் மொழிமட்டுமல்ல ,நல்லொழுக்கமும்தான் .  ஒரு குழந்தை உலகியல் வாழ்க்கையைத் தொடங்கும் போது எதற்கும் ஒரு வலிமையான காரணத்தைத் தேடும் . காரணம்  தெரியாமல் எந்தக் கட்டுப்பாட்டையும் குழந்தைகள் ஒத்துக் கொண்டு ஏற்றுக்கொள்வதில்லை . காரணங்களைப் புரிந்து கொள்வதற்கு தேவை என்பதால் ஒழுக்கத்திற்கும் முன்னர் மொழி அவசியமாகின்றது . மொழி மட்டுமின்றி எதையும் கற்றுக்கொள்ள ஒழுக்கம் வேண்டும் என்பதால் ஒழுக்கமும் கல்வியும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பு  கொண்டவை.ஒழுக்கத்தைக் கற்பிக்கும் போது அதைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் , பின்பற்றாவிட்டால் ஏற்படும் பின் விளைவுகளையும் எடுத்துக் கூறவேண்டும் . விகார எண்ணங்கள் தோன்றுவதற்கு முன்னரே விதைக்கப்படும் இந்த நல்லெண்ணங்கள் மட்டுமே நிறம் மாறாமல் நிலைத்து நின்று பயன் தருகின்றன  
ஒழுக்கமே கல்வி என்பதால் ஒழுக்கமில்லாத கல்வி கல்வியாக மதிக்கப்படுவதில்லை . ஒழுக்கமில்லாத கல்வி  கல்வி கற்றவனுக்கும்  , சமுதாயத்திற்கும் பயன்தருவதில்லை . தவறான வழியில் சென்று ஒழுக்கமின்மையால்  வாழ்க்கை முழுவதையும் தானாகவே சீரழித்துக் கொள்கின்றான் .மேலும் அவன் பிறருக்கு ஒரு தவறான முன் உதாரணமாக இருப்பதால்  சமுதாயத்தையும் தொடர்ந்து சீரழிக்கின்றான். . ஒருவன் கல்வியை இழந்தான் என்றால் அது அவனுக்கும் மட்டும் இழப்பு , ஆனால்  ஒழுக்கத்தை இழந்தான் என்றால் அது சமுதாயத்திற்கே இழப்பு. ஒழுக்கமின்மையால் ஏற்படும் இழப்பு கல்லாமையால் ஏற்படும் இழப்பை விட அதிகம் என்பதால் சுய ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் போற்றவேண்டும். 
ஒழுக்கம் என்பதற்கு ஒரு பொதுவான விளக்கம் கொடுக்கலாம் . எவர் மனமும் எக்காலத்திலும் புண்படாமல் ,சமுதாயத்தின் நலன் கருதி ஒவ்வொருவரும் பின்பற்றி ஒழுகவேண்டிய நெறிமுறைகளையே  ஒழுக்கம் எனலாம் . தான் மட்டுமின்றித் தன்னைப் போல  பிறரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே இதன்  அடிப்படை,
 தான் வாழும் சமுதாயம் சாகாது பிழைத்திருக்க ஒவ்வொரு தனி மனிதனும் நல்லொழுக்கத்தை போற்றி ஒழுகவேண்டும் என்பதைத் தெரிவிக்க அறத்துப் பாலில் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தைப் படைத்த திருவள்ளுவர்  ஒழுக்கத்தின் அவசியத்தை அதன் சிறப்புகள் மூலம் கூறியுள்ளார். உயிரைக் கூட விடலாம் ஆனால் ஒழுக்கம் தவறுவதை செய்யக்கூடாது என்பதால்  ஒழுக்கம் உயிரினும் மேலானது (குறள் 131 ),  நல்லொழுக்கம் பிறவிப் பயனைத் தரும், குடிப்பெருமையை உயர்த்தும் .(குறள் 133). பொறாமைப் படுவதை வெறுக்கும்,பிறருக்குத் தீங்கு செய்ய விரும்பாது உதவி செய்ய விரும்பும்  (குறள் 138 ), ஒற்றுமையைப் போற்றி நல்லிணக்கத்தை வளர்க்கும் (குறள்140 ) ,            

No comments:

Post a Comment