Saturday, April 27, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 45

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?  
பெரும்பாலான மாணவர்கள் காலத்தை வீணாக்கி விடுகின்றோம்  என்று தெரியாமலேயே வீணடித்து விடுகின்றார்கள் . இது அவர்களே அவர்களுக்குச் செய்து கொள்ளும் தீங்கு என்பதாலும் , காலம் இலவசமாகக் கிடைக்கின்றது என்பதால் இன்றைக்கு  இழந்த காலத்தை நாளைக்குப் பெறலாம்  என்று நம்புவதாலும் இதற்காக மனம் வருந்துவதுமில்லை , திருந்துவதுமில்லை      
ஒரே நேரத்தில் பல சிந்தனைகள் , பல வேலைகள் செய்வதும் . பல நேரங்களில் ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதும் , சரியான நேரத்தில்  தவறாகச் செய்வதும் , தவறான நேரத்தில் சரியாகச் செய்வதும் நேரத்தை வீணாக்குவதற்குச் சமமாகும். பல வேலைகளில் ஈடுபட்டு ஒருவேலையையும் முழுமையாகச் செய்யாமல் பாதிப்பயனைப் பெறுவதைவிட ஒரு நேரத்தில் ஒரு வேலையை முழுமையாகச் செய்து அதனால் கிடைக்கும்  முழுப்பயனைப்  பெறுவதும் , அப்படி எல்லா வேலைகளையும் செய்து ஒவ்வொரு வேலையின் முழுப்பயனைப் பெறுவதும்  பயனுறு திறனை அதிகரிக்கும் .
தேவையில்லாத விவாதங்களில் ஈடுபடுவது நேரத்தையும் ,ஆற்றலையும் இழப்பதாகும் . சிறிதும் பயன்தராத , எண்ணத்தையும் ,செயலையும் திசை திருப்புகின்ற விவாதங்களிலிருந்து  விடுவித்துக் கொள்வது வெற்றிக்கு பாதி வழி வகுத்த மாதிரி . நேரமில்லை என்று சொல்வது ஒருவர் தன்னை அதிகப் பரபரப்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக  வாய் சொல்லும்  பொய். நேரத்தைச் சரியாகத்  கையாளத் தெரியாதவர்கள் ,  புத்திசாலித்தனமாக ஒரு வேலையை குறைந்த நேரத்தில் செய்து முடிக்கத்  தெரியாதவர்கள் , சும்மா இருப்பதில் இருக்கும் விருப்பத்தைக் காட்டிக்  கொள்ள விரும்பாதவர்கள் உச்சரிக்கும்  வார்த்தையே இது  .
ஒவ்வொரு  நிமிடத்தையும் செலவிடுவதில்  கவனமாக இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி கவைப்பட  வேண்டாம் . அது தானாகவே சிறந்ததாக அமைந்து விடும்  நிகழ்காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றவனுக்கு வளமான எதிர்காலம் இலவசமாகக் கிடைத்து விடுகின்றது . நிகழ்காலத்தைத் தவறவிடுகின்றவனுக்கு எதிர்காலம் என்றொன்று வருவதேயில்லை . 

No comments:

Post a Comment