Friday, April 5, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 24

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
ஒரு மாணவன் தன்கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமானால் , அதே நோக்கத்தில் முன்னேறிச் செல்ல ஒரு பாராட்டு  வேண்டும்.  பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , நண்பர்கள் அவ்வப்போது ஒரு நல்ல செயலுக்காக ஒருவரைப்  பாராட்ட பாராட்ட  அவர் தன் செயலில்  கொண்டுள்ள ஆர்வம் பல மடங்கு  விரிவடைகின்றது . மூன்றாவது நபர் செய்யத் தவறினால் அது போட்டி மனப்பான்மையினால் உள்ளுக்குள் வளரும் பொறாமையால் இருக்கலாம் , ஆசிரியர் செய்யத் தவறினால்  அது தனி நபர் மீது சிறப்பு அக்கறை காட்டுவதை விட அனைத்து மாணவர்கள் மீதும் காட்டப்படும் பொது அக்கறையோடு மனநிறைவு  பெறும் பழக்கத்தால் இருக்கலாம். ஆனால் தன் பிள்ளையின் முன்னேற்றத்தில் ஒரு பெற்றோர் அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது . ஆனால் பல பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளைப்  பாராட்டுவதேயில்லை  , மாறாக தங்களுக்கு   உரிமை  இருக்கின்றது  என்ற  எண்ணத்தில்  திட்டித் தீர்ப்பார்கள் .  இது எதிர்மறையான ஓர் அணுகுமுறை என்பதை ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள் . சாதனை படைத்தால்தான் பாராட்டவேண்டும் என்பதில்லை , சாதனை படைப்பதற்கான தகுதியைப் பெறுவதற்கு உற்சாகப்படுத்தும் ஒரு முயற்சியாகக் கூட இதைச் செய்யாலாம் . உத்தமமாக இருந்தால் உண்மையாகப்  பாராட்டுங்கள் , மத்திமமாக இருந்தால் உற்சாகமூட்டும் நம்பிக்கையோடு பாராட்டுங்கள் , அதமமாக இருந்தால்  பாராட்டுவதைத் தவிருங்கள் . அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் . பின்விளைவுகளாக ஏற்படும்  இழிவுகளையும் , முன்னேற்றத் தடைகளையும் எடுத்துரைத்து மனதில் ஒரு மாற்றம் ஏற்படும் படி அறிவுரை கூறுங்கள் . உண்மையில் பிள்ளையின் சுய விருப்பமின்றி  ஒரு பெற்றோர் தன் உரிமையால்  எதையும்   திணித்து அவன் ஏற்றுக்கொள்ளுமாறு செய்யவே முடியாது . மாணவர்களுக்குப் பாராட்டு  உற்சாகமூட்டி அவர்கள் மென்மேலும் சுயமாகக் கல்வியில் ஈடுபாடு கொள்ள வலுவாகத் தூண்டுகின்றது .
பாராட்டுதல் என்பது ஒருவருடைய உள்ளத்தை உணர்ச்சிப் பூர்வமாகத் தொடும் இயல்புள்ளதால் அது உள்ளுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களும் குறிப்பிடும்படியாகத்தான் இருக்கும் 
ஒருவரைப் பாராட்டுதல் என்பது ஒருவகையில் அவர் முன்னேற்றத்திற்காகச் செய்யும்  மனப்பூர்வமான பிரார்த்தனைதான் . ஒருவர் செய்யும் தவறான செயலுக்காகப் பலமுறை திட்டும் பலர் ஒருமுறை கூட ஒருவர் செய்யும் நல்ல செயலுக்காக ப் பாராட்டவேண்டும் என்று நினைப்பதேயில்லை . ஒரு சிறிய பாராட்டுக் கூட ஒரு உந்தர்காரணியாகி  ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்பதை ரபீந்திரநாத் தாகூரின் சுயசரித்திரம் சான்று கூறுகின்றது  .
ரபீந்திர நாத் தாகூர்  ( Rabindranath Tagore )  ( 7  மே 1861- 7  ஆகஸ்ட் 1941) இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கல்கத்தாவில்  தேவேந்திர நாத் தாகூர் - சாரதா தேவி தம்பதியினருக்குப் பிறந்த 13 குழந்தைகளில் இளையவராவார் . இவர் சிறந்த படைப்பாளர் . எழுத்தாளர் , கவிஞர், இசை அமைப்பாளர் , நாடக ஆசிரியர் , ஓவியர் என்று பன்முகத் தன்மை கொண்டவர். கீதாஞ்சலி என்ற கவிதை நூலைப் படைத்து 1913  ல் இலக்கியத்திற்காக  ஆசியாவின் முதல் நோபல் பரிசைப் பெற்றார் .நம் நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவரும் இவரே ஆவார்.  தாகூர் தனது 8 வது வயதிலிருந்தே  கவிதை எழுதத் தொடங்கினார். தனது 15 வது வயதில் பானு  சிம்ஹா (சூரிய சிங்கம் ) என்ற தலைப்பில் முதல் கவிதை நூலை வெளியிட்டார்   சாந்தி நிகேதன் மற்றும் விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் .போன்றவற்றை நிறுவினார் . அவரது பிரபலமான இசைதட்டுகள் அனைத்தும் ‘ரவீந்திரசங்கீத்’ என்ற பேரில் அழைக்கப்பட்டன. இவர் இயற்றிய ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களான “ஜன கண மன” மற்றும் “அமர் சோனார்”,இந்தியா மற்றும் வங்காளத்தின் தேசிய கீதங்களாக உள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
 சிறுவயது முதற்கொண்டே தாகூர் கவிதை எழுதுவதில் ஆர்வர் கொண்டிருந்தார் . ஒரு முறை ஓரு கவிதையை எழுதி தன் தந்தையாரிடம் காண்பிக்க, அது நன்றாக இல்லாவிட்டாலும் மகன் உற்சாகத்தை இறந்துவிடுவான் என்று அந்தக் கவிதைக்காகப் பாராட்டி ஒரு கைக்கடிகாரத்தையும் பரிசாக அளித்தார் .இதனால் தாகூர் மேலும் மேலும் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு தன் திறமையை வளர்த்துக் கொண்டார். அவர் தன்னை ஒரு பெரிய கவிஞனாக வெளிப்படுத்திக் காட்ட இது ஒரு தூண்டற் காரணியாகியது .
ஒவ்வொருவருவரும் தங்கள் தனி திறமைகளை வளர்த்துக்கொள்ள ஏதாவதொரு  தூண்டற் காரணியை இனமறித்து ஏற்படுக்கொள்ள வேண்டும் .இது அகத்  தூண்டுதலாகவோ அல்லது புறத் தூண்டுதலாகவோ இருக்கலாம் . பாராட்டுக்கள் நல்ல  தூண்டற் காரணியாகும்.

No comments:

Post a Comment