Tuesday, April 23, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 39

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
நல்லொழுக்கங்களின் அவசியத்தை சமுதாயத்தில் நடக்கும் உண்மை நிகழ்வுகளை க் கதை போல எடுத்துக் கூறும் போது அதன் தாக்கம் வலிமையாக இருக்கின்றது.நல்லது செய்வதினால் ஏற்படும் பயன்களையும் தீமை செய்வதினால் விளையுயம் தீங்குகளையும் எடுத்துக்காட்டாக உண்மை பேசுவதினால் விளையும் நன்மைகளையும் , பொய் பேசுவதினால் விளையும் தீமைகளையும் அவ்வப்போது தக்க உதாரணங்களுடன் எடுத்துக் கூறவேண்டும்.
நல்லொழுக்கத்தின் கட்டளைகள்  
1.உண்மையே பேசவேண்டும் ,பொய் பேசக்கூடாது 
இக்கருத்தை  மகாத்மா காந்தி சிறுவயதில் அரிச்சந்திரா நாடகம் பார்த்தபின் ஏற்படுத்திய மாற்றங்களை எடுத்துக் கூறி வலியுறுத்தலாம். நீதி மன்றத்தில் ஒரு பொய்சாட்சி எப்படி வழக்கின் போக்கை திசை திருப்பிவிடுகின்றது என்பதையும் , அதனால் குற்றவாளிகள் தப்பித்து மேலும் மேலும் சமுதாயத்தை சீரழித்து வருவதையும் விளக்கிக் கூறலாம். 
ஏற்றுக்கொள்வதற்காக ஒரு கருத்தைத் தெரிவிக்கும் போது அதற்கு முரண்பட்ட கருத்துக்களை சொல்லக் கூடாது . எடுத்துக்காட்டாக , பொய் சொல்லக் கூடாது என்பதை வலியுறுத்தும் போது நல்லது நடக்கும் என்றால் பொய்யும் சொல்லலாம் என்பதைத் தெரிவிக்கக் கூடாது . பொய் சொல்லக் கூடாது என்ற நேர்மறையான கருத்தை எண்ணத்தில் நிலைப்படுத்துவதற்கு முன்னரே எதிர்மறையான கருத்தையும் சேர்த்தே விதைக்கக் கூடாது . விதியைக் கற்றுக்கொள்வதற்கு முன்பாக விதி விலக்குகளைப் பற்றித்  தெரிவிப்பது  குழப்பத்தை ஏற்படுத்தும் . விதியைப் பின்பற்றுவதற்கு விதி விலக்கு ஒரு நிரந்தரமான குறுக்கு வழியாக அமைந்துவிடும் என்பதால் விதிமீறல்கள் அனுமதிக்கப்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும் . விதிகளை நன்கு புரிந்து கொண்டு  மனப்பக்குவம் அடைந்த பின்னரே விதி விலக்குகளைப் பற்றி த் தெரிவிக்க வேண்டும் . அதையும் அதற்கான காரணத்தோடு விளக்கிக் கூறவேண்டும்.  
2.தன் உடைமைகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும் . அது பிறருக்குத் தேவைப்பாட்டால்  கொடுத்து உதவலாம். விருப்பமில்லை என்றால் காரணத்தோடு மறுக்கலாம் . பிறருடைய உடைமைகளில் ஆசை கொண்டு திருடக்கூடாது . எதை அடைய  விரும்பினாலும் அதை சுய முயற்சியினால் சம்பாதிக்க வேண்டுமே ஒழிய திருடி மற்றவர்களையும் திருடர்களாக்கி சமுதாயத்தைச் சீரழிக்கக் கூடாது .  எந்தத் தவறுகள் செய்வதற்குத் தனக்கு உரிமை இருக்கின்றது என்று நினைக்கின்றோமோ அதே தவறுகளைச்  செய்ய மற்றவர்களுக்கும் உரிமை இருக்கும் என்பதால் எல்லோரும் மறைமுகமாகக் குற்றவாளிகளாக வளரும் வாய்ப்பு ஏற்படும். தன் உடைமைகளைப் பிறருக்குக் கொடுத்து உதவும் மனப்பான்மையால்  நட்பையும் மனித நேயத்தையும் வளர்க்க முடியும். பிறருக்கு உதவுவதால் பிறரிடமிருந்து உதவி பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றது .குழந்தைகள் தங்கள் உடைமைப் பொருட்களைத் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் , அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் எப்பவும் வைத்துப் பயன்படுத்தவும் பழக்கவேண்டும். 
3.கால முறைப்படி  கொடுக்கப்பட்ட கடமைகளைச் செய்து முடிக்க பழக்க வேண்டும் .நேரந்தவறுவதை அனுமதிக்கக் கூடாது . நாளை. நாளை என்று செய்ய வேண்டிய கடமைகளைத் தள்ளிப் போடக்கூடாது . இது காலையில் அதிக நேரம் தூங்காமல் படுக்கையில்  எழுவதிலிருந்து  தொடங்கி  இரவில் அதிக நேரம் விழித்திருக்காமல்  உறங்கப் போவது வரை உள்ளடங்கி உள்ளது .
4.பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். கோபப்பட்டு கடுஞ்சொற்களைப் பேசாமல் இனிய சொற்களையே பேசவேண்டும் . பிறர் மனம் புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது . ஒருவருடைய மனத்தைப் புண்படுத்தினால், நம்  முன்னேற்றத்திற்குத் தடையாக ஒரு எதிரியை நாமே உருவாக்கிக் கொள்கின்றோம்.தவறு செய்வது மனித இயல்பு. மனித இயல்பு என்பதற்காகத் தவறுகளைச் செய்துகொண்டே இருக்கக் கூடாது . நம்மையும் அறியாமல் தவறு செய்து விட்டால் அதைப் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு வருத்தப்பட்டு மன்னிப்பைக் கேட்டுப் பெறவேண்டும்.    

No comments:

Post a Comment