Thursday, April 4, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி?-23

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?  
திறமையை வளர்த்துக் கொள்வது என்பது படிப்பதும் , படிப்பதைப் புரிந்து கொள்வதோடு மட்டும் முடிந்து விடுவதில்லை .அதற்கும் அப்பாலிருக்கும் வழிமுறைகளில் ஏற்படுத்திக் கொள்ளும் நுட்பமான வேறுபாடுகளே சிறந்த மாணவர்களுக்குள்ளும் தர நிலையில் ஒரு வேறுபாடு  ஏற்படுவதற்கு   காரணமாக இருக்கின்றன. புரிதல் என்பது கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளும் திறத்தைப் பெறுவதாகும் . ஆனால் இயல்பு மீறிய புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ள கல்வியில் உள்ள புரிதல் மட்டுமே  போதாது .  புரிதலோடு , புரிதலால் புதிய படைப்பாற்றலைப் பெறுவதற்கான  விரிதலும் 
வேண்டும் . இதை   மாற்றி யோசிக்கும்  சுய சிந்தனைகளாலும் , நுட்பமான மாறுபட்ட அணுகுமுறைகளினாலும் வளப்படுத்திக் கொள்ள முடியும் . புரிதலோடு விரித்தாலும் இணையும் போது , பிறருடைய உதவியின்றிப் புதிய வழிமுறையை க் கண்டறியும் திறமை மேம்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது .விஞ்ஞானிகள்  இப்படிப்பட்ட விரியும் சிந்தனைகளால் புதிய புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டறியும் திறமையை ப் பெறுகின்றார்கள் . வெறும் பாறையிலிருந்து அழகிய சிலைகளை சிற்பிகள் வடிக்கிறார்கள் . கல்லுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் உருவங்களை இந்தக் கலைஞர்கள் தான் முதன்முதலில் பார்க்கின்றார்கள் . அழகான நவீன அடுக்குமாடிக்  கட்டடங்களை கட்டும் திறமையை பொறிஞர்கள் பெறுகின்றார்கள் . உள்ளுக்குள் விரியும் அறிவே  மதிநுட்பம் எனலாம் . மதிநுட்பம் மிக்கவர்களால் மட்டுமே ஒரு சிக்கலை த் தீர்க்க முடியும் , ஒரு பிரச்சனையின் போக்கை  மாற்றி அமைக்கமுடியும் .விதியைக் கூட வென்று காட்டமுடியும்.
கல்வியைப் புரிதலோடு கற்றவர்கள் பலர் விதியை வெல்லும் திறமையுள்ளவர்களாக இருப்பதில்லை. இல்லாத விதிக்கு இருக்கும் மதியை அடகு வைத்துவிட்டு மனம் நொந்துகொள்வார்கள் .
வாய்ப்புக்களை த் தவறவிடுதல் என்பது விதி, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பது மதியின் ஒரு நிலை . மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும்  வாய்ப்புதான் என்பதை மதியால் விதியை வென்று சாதனை படைத்தவர்கள்  மட்டுமே  சான்றாக இருக்கின்றார்கள் . விதியை மதியால் வெல்லலாம் என்பதை மனம்  நொந்துபோன  ஓர் ஏழைக்குச் சொல்லப்பட்ட  கதை புரியச் சொல்லுகின்றது.
ஓர் ஏழை தொடர்ந்து  வறுமையில் உழன்று வந்தான் . .அவனுக்கு உழைப்பின் மீது வெறுப்பு வளர்ந்தது. அதற்குக்  காரணம் அவனுடைய  பல  முயற்சிகள் தோல்வியில் முடிந்ததுதான் . எந்தக் காரியம் செய்தாலும் தோல்வியே கிடைக்கும்  என்று ஜாதகம் கூறியதை அப்படியே நம்பினான் . ஒருநாள்  ஒரு மகானைச் சந்திக்கும் வாய்ப்புக்  கிடைத்தது.  அவரிடம் போய் தான் கடந்துவந்த துயரங்களை விவரித்து எல்லாம் விதியின் திருவிளையாடல்  என்று வருத்தப்பட்டான் . அந்த மகான் விதியென்று ஏதுமில்லை , மதிக்கு முன்னால் விதி ஒரு விளையாட்டுப் பிள்ளை  என்பதை ஒரு செயல் விளக்கம் மூலமாகவே விவரித்தார்.  ஒரு கல்லை மேல்நோக்கி எறிந்து விட்டு  , இந்தக் கல்லில் விதி என்ன என்று அந்த ஏழையிடம் கேட்டார். "அந்தக் கல் கீழே விழும் " என்றான் . " நான் அந்த விதியை என் மதியால் மாற்றிக் காட்டுகின்றேன் பார்"  என்று சொல்லிவிட்டு ,அந்தக் கல்லைக் கீழே விழுவதற்கு முன்பு கையால் பிடித்துக் காட்டினார் .அதற்க்கு அந்த ஏழை " இதுவும் விதிதான் " என்றான் . மகான் மீண்டும் ஒரு கல்லை மேலே தூக்கி எறிந்து விட்டு , சட்டென மற்றொரு கல்லை வீசி , கல்லோடு கல்லை மோதச் செய்து அதை வேறொரு இடத்தில் விழுமாறு செய்தார்.  அது போல மற்றொருமுறை செய்து . இரண்டுகற்களையும்  சிதறிப்போகுமாறு செய்தார் . வேறொருமுறையில் முதலில் எறிந்த கல் ஒரு மரத்தின் மீது அடைக்கலம் ஆகுமாறு செய்து காட்டினார் . இவை எல்லாம் விதி தான் என்று அந்த ஏழை மறுத்தான் . அதற்கு மகான் " இருக்கலாம் , ஆனால் இது புதிய விதி.    அதாவது இந்த விதியை உன்னால் உன் விருப்பம்போல மாற்றி யமைத்துக் கொள்ள முடியும் . விதி என்பது முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவை அப்படியே ஏற்றுக் கொள்வது , மதி என்பது அந்தத் தீர்மானம்  எது என்று முடிவு செய்வது . ஒரு தீர்மானம் ,ஒரு முடிவு என்றால் அது விதி  வழிச் செல்வது . ஒரு தீர்மானத்திற்கு பல முடிவுகளும் . ஒரு முடிவுக்கு பல தீர்மானங்களும் இருக்கும். அவற்றைப்புரிந்து கொண்டால் அது மதி. அவர்கள்   மட்டுமே விதியைத் தன் மதியால் வெல்லும் ஆற்றலைப் பெறுகின்றார்கள்         

No comments:

Post a Comment