Thursday, April 11, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 31


2 . மீண்டும் மீண்டும் மூளையில் செய்த பதிவுகளை அசை போடவேண்டும். மாடுகள் விரைவாகப் புற்களை மேய்ந்துவிட்டு , பின்னர் நிதானமாக அசைபோடும். அதனால் அவைகள் உட்கொண்ட உணவை முழுமையாக ஜீரணித்துக் கொள்ளுகின்றன. கற்பதற்காக கற்றுக்கொண்ட கருத்துக்களையும் இதுபோல முழுமையாக உட்கிரகித்துக் கொள்ள இக்கருத்துக்களை மீண்டும் மீண்டும் அசை போடவேண்டும் . இதனால் வேறு பல நன்மைகளும் உண்டு . திரும்பத் திரும்ப விளம்ப எழுதப்படும்  எழுத்துக்கள் அழுத்தமாகத் தெரிவதைப் போல , மீண்டும் மீண்டும் அசை போடப்படும் எண்ணங்கள் ஆழமாகப் பதியப்படுகின்றன அதனால் அவை எண்ணத்தை விட்டு அகலும் வாய்ப்பின்றி வாழ்க்கை முழுதும் பயன்தரத் தக்கதாய்  இருக்கின்றது .பின்னர் மேற்கொள்ளும் எண்ணங்களின் பதிவுகள் கூட இவற்றை அரித்தெடுப்பதில்லை . தேவையான பதிவுகளை மீண்டும் மீண்டும்  அசை போடுவதாலும் , தேவையற்ற பதிவுகளை அப்படி அசை போடுவதைத் தவிர்ப்பதாலும் பதிவுகளின் பயன்பாட்டை ஒருவர் மேம்படுத்திக் கொள்ள முடியும் . தவிரவும் படிக்கும் நேரம் முழுவதையும் பயனுள்ளதாக்கிக் கொள்ள  ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியுடன் மீண்டும் மீண்டும் அசைபோடுவது  துணை செய்கின்றது . தொடர்ந்து படிப்பதை ஒரு புரிதலுடன் செய்வதை ஊக்குவிக்கின்றது. . புரிதலுடன் படிப்பதால் படிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் வெகுவாகக் குறைகின்றது .
ஒவ்வொருநாளும் என்ன படிக்க வேண்டும் ,எவற்றை மறு மதிப்பீடு செய்யவேண்டும் என்பதை த் திட்டவட்டமாகத் தீர்மானம் செய்யும் மனப் பக்குவத்தை இது ஏற்படுத்திக் கொடுப்பதால் குழப்பத்தால் ஏற்படும் தடுமாற்றம் வருவதில்லை .
மறு மதிப்பீடு என்பது கற்றதை எவ்வளவு புரிதலுடன் கற்றோம் என்பதை அறிந்து கொள்ளும் சுய முயற்சியாகும் .ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கான சுய மதிப்பீடு திருப்திகரமாக இல்லாது  இருக்குமானால் அதில் எடுத்துக்கொள்ளும் அடுத்த சுய மதிப்பீடு குறுகிய கால இடைவெளியுடன் மேற்கொள்ள வேண்டும்.  சுயமதிப்பீட்டில் பிழைகள் இல்லாது திருப்திகரமாக இருந்தால் அதில் மறு மதிப்பீட்டிற்கான கால இடைவெளியை  அதிகரித்துக் கொள்ளலாம் . ஒரு சுய மதிப்பீட்டின் போது செய்யும்  பிழைகளுக்கு ஏற்ப   இந்தக் கால இடைவெளி யை  அடுத்தடுத்த சுயமதிப்பீட்டிற்கு  அதிகரித்து அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்
இந்த மறுமதிப்பீடு என்பது ஒருவகையில் புத்தாக்க முயற்சியாகும் . இதனால் கற்றதை ஒவ்வொருமுறையும் சரியாக கூடுதல் விவரங்களுடன்  எடுத்துரைக்கவும் , எழுதவும் முடிகின்றது . நினைவாற்றல் இயல்பான வழிமுறையில் தொடர்ந்து அதிகரிக்கின்றது .
ஒத்த கருத்துடைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து படிப்பதும் , பாடசம்பந்தமாக தேர்வு வைத்துக் கொண்டு சுய மதிப்பீடு செய்வதும் , படிக்கும் பாடங்களை இயற்கையோடும் , சமுதாயத்தோடும் தொடர்புபடுத்திப் படிப்பதும், நண்பர்களுடன் அடிக்கடி கலந்துரையாடல் மேற்கொள்ளுவதும் ,புரியாத மாணவர்களுக்குப் புரியச் சொல்லிக் கொடுப்பதும்  நினைவாற்றலை வலுவூட்டக்கூடியது என்பதால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க  கால இடைவெளியுடன் கூடிய மறு மதிப்பீட்டு முறையைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் .   

No comments:

Post a Comment