Sunday, April 14, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 34

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
5 . புதிய பாதையை  புதிய கருத்துத் தொடர்புகளினால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .படிப்பு என்பது அடிப்படைத் திறமை . அதைப் பயன்படுத்துவது தொழில் வளமை  . பயன்பாட்டின் பயனுறுதிறனை அதிகரிக்க முயல்வது புதுமை, அதை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கண்டறிவது தனித் திறமை . முதலிரு திறமைகளையும் கல்வி , சுய மதிப்பீடு மற்றும் செயல்திறன் மூலம் பெறலாம். ஆனால் புதிய பயன்பாட்டை அறிதல் என்பது சிந்தனைகளுக்கு மூலமான கருத்துத் தொடர்புகளினால் மட்டுமே இயலும்   புத்திசாலியான மாணவர்கள் படிக்கும் போதே புதிய தொடர்புகளாலான சிந்தனைகளை இயல்பாக  மேற்கொள்வார்கள் . புரிதல் அதிகரிக்கும் போது இந்த விருப்பமும் அதிகரிக்கும் . ஏன் , எதற்காக, எப்படி , என்ற கேள்விகளைத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு அதற்கான விடையைத் தேடிக் கண்டு பிடிப்பார்கள் .  இது கல்வி தேடுதலுக்கான ஒரு வலிமையான தூண்டுகோலாக இருக்கும். புரிதலும் ,கல்வி தேடுதலும் மிகும் போது புதிய பாதைகள் தானாக உருவாகித் தென்படுவதுடன் புதிய பாதையில்  முன்னேறிச் செல்ல கலங்கரை விளக்காகவும்  இருக்கின்றன  . புதிய கண்டுபிடிப்புக்களுக்குக் காரணமாக இருந்த, இருக்கும்  விஞ்ஞானிகள் இளமைக்காலத்தில் புதிய பாதையில் பயணிக்க இப்படி ஒரு  கலங்கரை விளக்கை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் 
அறிவு மிகுந்து வர அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற உள்ளுணர்வு தூண்டப்படும். அறிவைப் பயன்படுத்த பயன்படுத்த  புதிய அறிவின் தேவைகளும் அதிகரிக்கும் . பயன்பாட்டில் ஏற்படும் நம்பிக்கையே புதிய சிந்தனைகளுக்கும்  தேவைகளுக்கும் அடிப்படையாகின்றது . விளைபயனில் கொண்டுள்ள நம்பிக்கையே செயல்களுக்கு அடிப்படையாகின்றது . அது தனக்கும் தான் வாழும் சமுதாயத்திற்கும் பயனளிக்கும்  என்ற நம்பிக்கையையே  வாழ்க்கையின் நோக்கமாகிவிடுகின்றது  இந்த நோக்கம் உறுதியாக மனதில் நிலைகொள்ளும் போது ,  இயல்பாக மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளினால் புதிய அறிவு தேடுதலுக்கான வாய்ப்புக்கள் இயல்பாகவே வந்து சேரும் . தற் செயலான வாய்ப்புகள் கூட தகுதியுள்ளவர்களுக்கே  அமைகின்றது .தகுதியை மேம்படுத்திக் கொள்ளாமல் வாய்ப்புக்களைத் தேடுபவர்களுக்கு  முயற்சியிலான வாய்ப்புக்கள் மட்டுமின்றி தற்செயலான வாய்ப்புக்களும் அமைவதில்லை 
லூயி பாஸ்டர்  என்ற மருத்துவ அறிஞர் ஆராய்ச்சி செய்வது சமுதாயத்திற்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டவர் . அவர் அம்மை நோய்க்கு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து கொள்ளை நோய்க்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார் . சரியான மருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போன பலர்  பாஸ்டர் தன் அறிவின் திறத்தால் இதைக் கண்டு பிடிக்கவில்லை அதிருஷ்டத்தால் தற்செயலாகத்தான்  கண்டுபிடித்தார் . இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை என்று கேலி பேசினர். அதற்கு  பாஸ்டர்  " பயிற்சியால் பக்குவப்பட்ட மனம்தான் கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் . அது தற்செயலானதில்லை " என்றார். ஆம் , அறிவு என்பது வாய்ப்புக்களைத் தேடுவதும், கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளவதிலும் நிறைந்திருக்கின்றது.வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றைப் பயன்படுத்தத்  தெரியாமல் வீணாக்கிவிட்டு  கண்டுபிடிக்காத தவறுபவர்களும் இருக்கின்றார்கள். அவர்களே இருக்கும் அறிவைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவர்களாக இருக்கின்றார்கள் 

No comments:

Post a Comment