Thursday, April 25, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? -42


சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
பொதுவாக மாணவர்கள் எப்பொழுதும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்காமல் என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருப்பதுதான்  அவர்களை வேலை செய்யத் தூண்டாமல் சோம்பேறியாகவே வைத்திருக்கின்றது . சூழ்நிலைகளுக்கு ஏற்ப விரைந்து முடிவெடுத்து செய்யவேண்டிய செயல்களைச்  செய்வதில்லை அல்லது மிகுந்த காலதாமதத்துடன் செய்கின்றார்கள். அப்படிச் செய்யும் போது செய்யப்படும் வேலைகள் முழுமையாகச் செய்யப்படுவதில்லை . எதிகாலத்தை மேயும் அவர்கள் நிகழ் காலத்தைத் தவறவிட்டுவிடுகின்றார்கள் . இறந்த காலம் இருந்ததால் தான் நிகழ்காலம்  வருவதுபோல  நிகழ்காலம் இருந்தால்த்தான் எதிர்காலம் மலரும்.நிகழ்காலமில்லாமல் எதிர்காலமில்லை என்பதை புரிந்து கொண்டுவிட்டால் வளமான எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தைப்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்
பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் , புத்தகங்களையும் பிற பொருட்களையும்  அவர்களுக்குரிய இடங்களில் வைப்பதை வழக்கமாகக் கொள்ள  வேண்டும். பொருட்களை எடுத்த இடத்தில்  வைப்பதால்  அப்பொருளை எடுக்க நினைக்கும் போது  தடுமாற்றமின்றி உடனடியாக எடுக்க முடிகின்றது . வெவேறு இடங்களில் வைக்கும் போது மறதியின் காரணமாக அவற்றை இடமறிந்து பயன்படுத்துவதற்கு காலதாமதமாகின்றது . மாலை விளையாட்டுக்கு உகந்த நேரம்,பொழுது போக்கு க்காக   மட்டுமின்றி உடல்நலத்திற்காகவும்  விளையாட்டில் ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும்  விளையாடவேண்டும். பிறகு பெற்றோர்களுடன் அல்லது நண்பர்களுடன்  கலந்துரையாடல் . அன்றைக்கு பள்ளியில் நடந்த வற்றையும் , பிற பொது விஷயங்களைப் பற்றிக்  கூறியும் கேட்டும் தெரிந்து கொள்ளலாம்.ஒவ்வொருநாளும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இருந்து பேசிக்கொண்டிருப்பது அவர்களுக்கு ஊக்கத்தையும் சுய மதிப்பையும் கொடுக்கும்.செய்தித் தாளைப் படித்து தேவையான செய்திகளைச்  சேகரிக்கலாம்.பொது நூலகங்களுக்கு ச் சென்று கல்வி தேடலைச் செய்யலாம். பின்னர் வீட்டுப் பாடங்களைச் செய்து முடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தி ல் இரவு உணவை முடித்துக் கொண்டு  படுக்கச் செல்லலாம் . உறங்குவதற்கு முன்னர் அன்றைக்கு நடத்தப்பட்ட பாடங்களைப் பற்றி மீண்டும் நினைவுபடுத்தி புரிந்து கொண்டதின் அளவைத் தெரிந்து கொள்ளலாம் . இரவில் படுப்பதற்கு முன்னர் தொலைக்காட்சி , கைபேசியைப் பொழுதுபோக்கிற்காகப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் கண்டு மகிழ்ந்த காட்சிகள்  நினைவில் நிலைத்து நின்று எண்ணங்களை திசை திருப்பிவிடும்.உறக்கம் வருவதற்கும் நேரமாகலாம். இது மறுநாள் விழித்தெழுவதற்கு தாமதமாகி வழக்கமான வேலைகளை உரிய நேரத்தில் செய்வதற்கு  தடையாகிவிடுகின்றது
ஒவ்வொருநாளும் வீட்டுப் பாடங்களை அன்றைக்கே முடித்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தள்ளிப் போடப்படும் எந்தப்பணியும் முழுமையாக முடிக்கப்படுவதே இல்லை . செய்யவேண்டாம் என்பதற்கு இடையில் வரும்  ஒரு சமாதானமே  தள்ளிப் போடுதல் என்பதை உணர்ந்தவர்கள் வேலையும் , வேலை செய்வதற்குரிய காலமும் இருக்க வேலையைச் செய்யாமல் விட்டுவிடுவதில்லை . 

No comments:

Post a Comment