Tuesday, April 2, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 21

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் காலத்தில் பிற வேலைகளில் ஈடுபட்டு ,திறமையை முழுமையூட்டுவதைத் தடை செய்யக்கூடாது . திறமை  முழுமையாக இருந்தால், அதனால் வெளிப்படும் பயன்களும் பயனுறு திறன்மிக்கதாக இருக்கும்.  இதற்கு பெரியவர்கள் வளரும் மரத்தைத்தான் எடுத்துக்காட்டாய்க் கூறுவார்கள். வளரும் ஒரு சிறிய மரம் வளர்ந்து காய்க்கும் மரத்தைப் பார்த்து தானும் அப்படிக் காய்க்கவேண்டும் என்று விரும்பி ,அதைப்போல காய்ப்பதில்லை. ஏனெனில் அப்படிக் காய்த்தால் , விளைபொருட்களைத்  தாங்கமுடியாமல் அந்தச் சிறிய மரம் ஒடிந்து விழுந்துவிடும். அதனால் அந்தச் சிறிய மரம் , அப்படிக் காய்த்து வழங்குவதற்கான தன் தகுதிப்பாட்டை முழுமையாக வளர்த்துக் கொண்ட பிறகே காய்க்கத் தொடங்குகின்றது  .அதுமட்டுமன்று , பின்னாளில் காய்த்து வழங்குவதற்காகவே ஒவ்வொரு மரமும் தன்னை வளர்த்துக் கொண்டு தகுதிப்பாட்டை மேம்படுத்திக் கொள்கின்றது. ஒரு மரத்தின் முதன்மை இலக்கு அது விதையாக இருக்கும் போதே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது .ஒரு மாமரம்  மாம்பழங்களைக் கொடுக்கும் நினைப்புடன் மட்டுமே வளர்கின்றது . அது ஒருபோதும் அருகிலுள்ள பிலாமரத்தைப் பார்த்துவிட்டு  தானும்  பெருசா பிலாப்பழத்தைக்  காய்க்கவேண்டும் என்று இயற்கைக்குப் புறம்பாக விரும்பியதே இல்லை. மரங்களை போல மாணவர்களும் , இயற்கையைச் சிந்தனைகளுடன் விருப்பங்களைத்  தேர்வு செய்து , அதற்கான தகுதிப்பாட்டை முழுமையாகப்  பெறும்வரை  திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
 அப்படி முயன்று வளர்த்துக் கொண்ட திறமைகளை வெளிப்படுத்தி பயன்கொடுத்து பயனீட்டும் வாய்ப்புக்களைத் தேடவேண்டும். பொதுவாக வாய்ப்புக்கள் எல்லோருக்கும் தானாக  வருவதில்லை .தானாக வந்தாலும், முயன்று தேடி வந்தாலும், வாய்ப்புக்கள் வருமாறான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.நமக்கே தெரியாமல் பிறரால் நமக்கு அனுகூலமாக அமையும் வாய்ப்புக்கள் தானாக வந்தது போலத். தோன்றும்.  மற்றபடி வாய்ப்புக்களை நாம் தான் தேடிச் செல்லவேண்டும். தன் திறமைகளைச் சரியாக உணர்ந்தவனால் மட்டுமே சரியான வாய்ப்புக்களைத் தேடி வெற்றி பெறமுடியும். திறமைக்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்களைத் தேடினால் அதன் பயன்பாடு யாருக்கும் பயனின்றிப் போகும் . கோயில் யானை இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்திக் கூறுகின்றது
 யானை மிகவும் வலிமையானது . 50 பேர் சேர்ந்து தூக்கும் மரக்கட்டைகளை மிகச் சாதாரணமாகத் தூக்கிச் செல்லும் . ஆனால் கோயில் யானைக்குத் தன் வலிமை தெரியாது. ஒரு சிறிய சங்கிலியால் கட்டிப்போட்டால்  அறுத்துக் கொண்டு ஓடுவதில்லை .இதற்குக் காரணம் சுயதிறமையை உணராமையே. சிறிய யானையைக் கட்டிப்போடும் போது அது அறுத்துக் கொண்டு ஓட முயற்சிக்கும் . ஆனால் சிறிய யானையால் அது முடியாமல் போகும் .பல முறை முயற்சித்து முடியாமல் போனதால் அதையே நம்பிவிடும். அதன் பிறகு அது தன் உடல் வலிமையை வளர்த்துக் கொண்ட அளவிற்கு புத்தியை வளர்த்துக் கொள்வதில்லை . திறமையிருந்தும் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத கோயில் யானையைப் போல மாணவர்கள் வளர்ந்து விடக் கூடாது.         

No comments:

Post a Comment