Thursday, April 11, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? -30

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
மெதுவாகப் படிப்பது இயல்பானது மட்டுமல்ல எளிமையானது. உண்மையில் இயல்பான எல்லாம் எளிமையாகவே இருக்கும் . ஒரு வேலையைச் செய்வதற்கு ப் பல வழிகள் இருக்கும் போது ஒருவர் அவற்றுள் எவ்வழி எளிமையானதாக இருக்கின்றதோ அந்த வழியையே பின்பற்றுவார். அது மனித இயல்பு . திணிக்கப்படாமல் , எளிமையாக இருக்குமாறு வழிமுறைகளை மாற்றிக் கொடுத்தால் சிறு வயதிலிருந்தே படிப்பதை விருப்பமுடன்  மாணவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.  கடினமான வழிமுறைகள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படாததால்  கட்டாயப்படுத்தி திணிக்க வேண்டியதாகிறது . அதுவே எளிமையாக இருக்கும் போது மறுப்பின்றி  அவர்களாகவே விரும்பி ஏற்றுக்கொண்டு செய்கின்றார்கள் .மன விருப்பத்துடன் செய்யப்படும் எந்த வேலையும் சிறப்பாக அமையும்.  ஒருவருடைய இயல்புக்கு ஏற்றவாறு மெதுவாகப் படிப்பதைக் கற்றுக்கொடுத்தால் , அது வாழ்க்கை முழுதும் நற்பயனளிக்கும் .அதிக நாட்கள் எடுத்துக் கொண்டாலும் , ஒரே பணியை குறைந்த நேரத்தில் முடிக்கவும் , நிறைந்த பயனைப் பெறவும் முடிவதால்  கூடுதல் பயனுறுதிறன் மிக்கதாக இருக்கின்றது. 
மொழியில்  புலமை பெறுவது என்பது சொல்லாண்மையைப் பொறுத்தது . இன்றைக்கு மாணவர்கள் ஆங்கில  மொழி வழிக் கல்வி பயின்றாலும்  பெரும்பாலான மாணவர்களால் சரளமாக ஆங்கிலம் பேச எழுத முடிவதில்லை .இதற்குக்காரணம்புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப  எண்ணங்களை வெளிப்படுத்த குறைந்த  சொற்களின் போதாமையே. புதிய மொழிகளைக் கற்றுக்கொள்பவர்கள் , அந்த மொழியைக் குறுகிய  காலத்தில் கற்றுக்கொண்டால் குறுகிய காலப் பயனை மட்டுமே பெறுவார்கள். காலப்போக்கில் மொழியை மறந்துவிடுவார்கள்  மெதுவாக ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரம் ஒதுக்கிப் படிப்பது புதிய மொழியைக் கற்றுக் கொள்வதற்குப் பயனுள்ளது .
எல்லோரிடமும் ஆங்கில அகராதி கையிலிருக்கும் . தேவையான போது அதை புரட்டிப் பார்த்து சொற்களுக்கான அர்த்தத்தை சரிபார்த்துக் கொள்வார்கள் . தேவைக்காகப் படிக்கும் எதுவும் தேவை முடிந்தவுடன் மறந்து போகும் . மொழியை மொழிக்காகப் படிக்கவேண்டும் என்பதும்  ஒரு சொல்லைக் கற்கும் போது முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் , சரியான உச்சரிப்பு, எழுத்துப் பிழையின்றி சொற்களின் அமைப்பு , ஒரு சொல்லிலிருந்து உருவாகும் துணைச் சொற்கள், அர்த்தம் , பயன்பாடு , சொல்லுக்கு இணையான பிற சொற்கள் , எதிர்ச் சொற்கள் என ஒரு சொல்லைப்பற்றியே  விரிவாகக் கற்றுக்கொள்வதாகும்  .திட்டமிட்டுக் கற்கும் இந்த வழிமுறையை  மெதுவாகச் செய்யும்போது மட்டுமே மீண்டும் நினைவுகூரத் தக்க வகையில் பயன்தருகின்றது 
ஒரு ஆங்கில அகராதியை  ஒரு சில நாட்களில் படித்து முடித்துவிட முடியாது .படித்தது விரைவில் மறந்து போய்விடுவதால் கற்றது பயனற்றுப் போய்விடும் . ஆனால்  ஒரு நாளுக்கு ஒரு சில வார்த்தைகள் வீதம் கற்றுக்கொண்டால் ஓராண்டு காலத்தில்  பல நூறு வார்த்தைகளைக் கையாளும் திறமையைப் பெறுவார்கள் .  

No comments:

Post a Comment