Wednesday, April 24, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?- 40

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
ஒரு குழந்தை வளரும் போது ஒரு வேலையும் இல்லாமல் பொழுதை வீணாகக்  கழித்துவிடாமல்  பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உண்டு . அயல் மொழிப் பயிற்சி ,இசைப் பயிற்சி, நுண்கலைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி , விளையாட்டுக்களில் பயிற்சி ,யோகா பயிற்சி ,என ஓரிரு விருப்பத்   துறைகளில் பயிற்சி பெற்று சிறந்து விளங்க நல்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் . இது குழந்தைகளின் பிற துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுவதுடன் ,ஒரு குழந்தை நேரத்தை பயனுள்ளவாறு செலவழிக்கவும் கற்றுக்கொள்கிறது .அதனால் தீய சிந்தனைகளை மேற்கொள்ளவும், தீய செயல்களைச்  செய்யவும் நேரம் கிடைப்பதில்லை. .எந்த வேலையும் இல்லாமல் சும்மாவே இருப்பவர்கள் தான் தீய செயல்களையும், தீய சிந்தனைகளையும் மேற்கொள்கொள்கின்றனர். நாட்டில் குற்றங்கள் பெருகிவருகின்றன என்றால் அதற்கு  வேலையில்லாமல் அலையும் மக்களும் ஒரு காரணம். எல்லோருக்கும் வேலைவாய்ப்பு இருக்குமானால் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடய  காலம் இல்லாமையால் சமுதாயக் குற்றங்கள் பெருமளவு இயற்கையாகவே தடுக்கப்பட்டுவிடும் . சரிசமமான சமுதாயம் என்பதும் அதுதான்
 ஒரு குழந்தை பிற துறைகளில் பயிற்சி மேற்கொள்ளும்  போது  மிகுந்த ஆர்வம் கொண்டு முழு நேரத்தையும் அதற்காகவே செலவிட்டு கல்வி  கற்பதை  நிறுத்தி விடக்கூடாது . கல்விக்கும்  ,பிற துறை திறமைகளுக்கும் தேவைப்படும் காலத்தை முன்கூட்டியே திட்டமிட்டு ஒரு வேலையில் சேரும்வரை  அதைப் பின்பற்றி வருமாறு செய்யவேண்டும்.  வாழ்க்கைக்குத் தேவையான சம்பாத்தியத்தைப் பெறலாம் என்ற நம்பிக்கை வரும்போது பிற துறை திறமைகளை கூடுதலாக வளர்த்துக் கொள்ள கூடுதல் நேரம் ஒதுக்கலாம்.

No comments:

Post a Comment