Thursday, April 5, 2012

arika iyarpiyal

பனிக் கட்டித் துண்டில் களங்கம்







குளிர் சாதனப் பெட்டியில் உள்ள உறைகலனில் நீரை பனிக்கட்டித்
துண்டுகளாக உறைய வைக்கும் போது,அதன் புறப் பகுதி தெளிவாகவும்,
ஒளி ஊடுருவக் கூடியதாகவும் இருக்க,உட் பகுதி ஒளி ஊடுருவ
முடியாதவாறு,வெண் திட்டாலான ஒரு களங்கம் காணப்
படுகிறது. இதன் அறிவியல் பின்னணி என்ன ?



தூய பனிக்கட்டித் துண்டு,கண்ணாடிப் பாளம் போன்று ஒளி உட்புகக்
கூடியது.உட்பகுதியில் காணப்படும் வெண்திட்டிற்கு,நீர் உறையும் போது ஊடகத்தில் தோன்றும் நுண் குமிழிகளே காரணமாகின்றன .
இந்தக் குமிழிகளின் விட்டம் ௦.01 முதல் ௦.5 மிமீ வரையிலான
நெடுக்கையில் இருக்கிறது. நீர் உறையும் போது நுண் பனிக்கட்டி
படிகத்திற்கு இடையே இந்தக் குமிழிகள் சிறைப்படுகின்றன .

ஒரு நீர்மத்தில் கரைந்துள்ள ஒரு பொருளின் கரைதிறன்(solubility)
ஏதாவது ஒரு காரணத்தால் குறையும் போது அது ஊடகத்திலிருந்து வெளியேற்றப் படுகிறது.நீரில் கரைந்துள்ள காற்றின் கரைதிறன் வெப்பநிலைக்குறைவால் குறைவதால் காற்று வெளியேற்றப் படுகிறது.
நீர் உறைவது உலோகத் தட்டின் அடிப் பகுதியிலிருந்தும் குளிர்ச்சியான
புற வெளியால் புறப் பரப்பிலிருந்தும் தொடங்குகிறது. அதாவது உட்கருவான
மையப் பகுதி இறுதியாக உறைகிறது .அதனால் காற்றுக் குமிழிகள் முதலில்
உறைந்து கடினமாகி விட்ட பனிக்கட்டித் துண்டின் புறவோட்டுப் பகுதியால்
சிறைப் படுத்தப்படுகின்றன.
வெற்றிட வெளியில் தூய நீரை உறைய வைத்தால் இது போன்ற களங்கம்
உட்புறத்தில் தோன்றுவதில்லை

No comments:

Post a Comment