Thursday, April 26, 2012

எழுதாத கடிதம். நாம் முன்னேறுகிறோம், இந்தியா முன்னேறிக் கொண்டே இருக்கிறது என்று மேடைப் பேச்சாளர் பேசும் போதெல்லாம் எனக்குள் ஓர் உறுத்தல் தலை தூக்கும்.சும்மா இருந்தாலே உடம்பு வளரும் ,நாளும் பொழுதும் மலரும். அதையெல்லாம் முன்னேற்றம் என்று கூறிவிட முடியாது என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொள்வேன். நாம் உண்மையிலேயே முன்னேறி இருந்தால் நேற்று வாழ்ந்ததை விட இன்று இன்னும் வளமாக அல்லவா வாழவேண்டும் . நிலைமை அப்படியா இருக்கிறது ஒரு தனி மனிதனின் முன்னேற்றம் என்பது மூளை வளர்ச்சி, செயலாற்றும் திறன் மட்டுமே இன்றைக்கு மின்சாரம் முழு அளவில் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. நாளைக்கு சில நாள் அப்படிக் கிடைத்தாலும் தொடர்ந்து அப்படியே கிடைக் குமா என்பதும் ஐயமே , சிலவிடங்களில் உணவுப் பஞ்சம். பல இடங்களில் உணவு சரியாகக் கிடைப்பதில்லை. பெரும்பாலும் பலருக்கும் சரியான அளவில் சரியான சத்துணவு கிடைப்பதில்லை. தூய குடிநீர் எப்போதும் பிரச்சனைதான் .நீரும் தாராளமாகக் கிடைப்பதில்லை. அத்தியாவசியப் பண்டங்கள் சரிவரக் கிடைப்பதில்லை .கட்டுப் படுத்த முடியாத கலப்படத்தின் ஆதிக்கம் எரிபொருள் தட்டுபாடு. .பெட்ரோல் ,டீசல் பற்றாக்குறை .மின்சாரம் நாள் முழுதும் கிடைப்பதில்லை . மோசமான சாலை வசதிகள் சுகாதார வசதிகள் போதிய அளவில் இல்லை. பராமரிப்பும் இல்லை. எங்கும் எதிலும் எல்லோரும் ஏமாற்றப் படும் நிலை தலை விரித்தாடும் இலஞ்சம் ,ஊழல் . மனிதர்களுக்கு மனிதர்களே எதிரிகளாகிப் போனதால் ,குற்றங்களின் பெருக்கம் .தாய் நாட்டிற்கு விசுவாசமில்லாத தலைவர்கள் - உழைப்பில்லாமலே ஊதியம் பெற விரும்பும் அதிகாரிகள்,அலுவலர்கள்., இப்பொழுத் சொல்லுங்கள் நாடு முன்னேறுகிறதா ? எல்லாப் புள்ளி விவரங்களுமே உண்மை நிலையை சித்தரிப்பதாகக் கூற முடியாது. அதற்குக் காரணம் புள்ளி விவரங்கள் நம்பகத் தன்மையை இழந்து வருவதுதான்.பொதுவாக புள்ளி விவரங்கள் என்பது வாய்ப்புகள் பற்றிய அறிவியலே ஒழிய உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டும் மாயக் காண்ணாடி இல்லை. இன்றைய அரசியல் வாதிகளும் ,அதிகாரிகளும் சாதாரண மக்களுக்குப் புரியாதபடி புள்ளி விவரங்களை பெரிய பெரிய எண்ணிக்கையால் சொல்லி மலைப்பை ஏற்படுத்தி பெரிய அளவில் முன்னேற்றத்தை அடைந்து விட்டதாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை நிலை உண்மையிலேயே வேறு. பல நமக்குத் தெரியாமலேயே நடைபெறுகின்றன .பல நமக்குத் தெரிந்து நடந்தாலும் அல்லது தெரிய வந்தாலும் நாம் அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று கண்டு கொள்ளாமல் சும்மா இருந்து விடுகின்றோம். சிலர் நம்மை அது நேரடியாகப் பதிக்கவில்லை என்று ஒதுங்கிக் கொண்டு விடுகின்றார்கள். சிலவற்றை நிரூபிக்க முடியாததால் விட்டு விடுகின்றார்கள் .சிலவற்றை நிரூபிக்க முடிந்தாலும் வலிமையான எதிரியைச் சமாளிக்கப் பயந்து தவிர்த்து விடுகின்றார்கள். அல்லது எதிரி தன் செல்வாக்கினால் தப்பித்துக் கொள்கிறார். இப்படிப் பட்ட சூழலில் நாம் தயாரிக்கும் எந்தப் புள்ளி விவரங்களும் முழு அளவில் உண்மையாக இருக்கவே முடியாது

No comments:

Post a Comment